யோசுவா 24:14-24 - WCV
14
இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள்.நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள்.
15
ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள்.ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.
16
மக்கள் மறுமொழியாக,”ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!
17
ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார்.நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார்.
18
ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார்.நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம்.ஏனெனில் அவரே எங்கள் கடவுள்” என்றனர்.
19
யோசுவா மக்களிடம்,”உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது.ஏனெனில் அவர் தூய கடவுள்.அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.
20
ஆனால் நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார்.உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்து விடுவார்” என்றார்.
21
மக்கள் யோசுவாவிடம்,”இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என்றனர்.
22
யோசுவா மக்களிடம்,”ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்” என்றார்.அவர்கள்,”நாங்களே சாட்சிகள்” என்றனர்.
23
இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள்.இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள்” என்றார்.
24
மக்கள் யோசுவாவிடம்,”எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம்.அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்” என்றனர்.