ரோமர் 3:9-25 - WCV
9
அப்படியானால், மற்றவர்களைவிட யூதர்களாகிய நாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்துக்கு உட்பட்டிருப்பதாக ஏற்கெனவே எடுத்துரைத்தாயிற்று.
10
அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: “நேர்மையாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை:
11
மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை: கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ?
12
எல்லாரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர். நல்லது செய்பவர் யாருமில்லை: ஒருவர்கூட இல்லை.”
13
“அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி: அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.”
14
“அவர்கள் வாயில் சாபமும் கொடுமையும் நிறைந்துள்ளது.”
15
“இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள் விரைகின்றன:
16
பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன:
17
அமைதி வழியை அவர்கள் அறியார்.”
18
“அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை.”
19
திருச்சட்டம் சொல்வதெல்லாம் அந்தச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பொருந்தும் என நமக்குத் தெரியும். ஆகவே இவர்களும் உலக மக்கள் அனைவரும் சாக்குப்போக்குச் சொல்ல வழியின்றி இருக்கிறார்கள்.
20
ஏனெனில், திருச்சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகிறது.
21
இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது: திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.
22
இயேசு கிறிஸ்துவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்: நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை.
23
ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.
24
ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.
25
இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.