ரோமர் 11:17-24 - WCV
17
நல்ல ஒலிவ மரம் ஒன்றின் கிளைகள் சில தறிக்கப்பட்டு, அந்த ஒலிவ மரத்தில் காட்டொலிவ மரக்கிளை ஒன்று ஒட்டப்பட்டால், அது மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறது.
18
அந்தக் கிளை தறிக்கப்பட்ட கிளைகளைவிடத் தன்னைப் பெருமையாகக் கருதலாமா? அந்தக் காட்டொலிவ மரக்கிளை நீங்களே. அப்படியே நீங்கள் உங்களைப் பெருமையாகக் கருதினாலும், நீங்கள் வேரைத் தாங்கவில்லை: வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை மறவாதீர்கள்.
19
“நாங்கள் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன” என நீங்கள் சொல்லலாம்.
20
சரிதான்: அவர்கள் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாததால் தறிக்கப்பட்டார்கள்: நீங்களோ நம்பிக்கையின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள். ஆகையால் உங்களுக்கு இருக்க வேண்டியது உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே.
21
ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா?
22
இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்.
23
யூதர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிராத நிலையிலிருந்து மாறினால், அவர்களும் ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.
24
ஏனெனில், காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீங்கள் வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவமரத்தில் ஒட்டுப்போடப்பட்டீர்களானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுப்போடுவது எத்துணை எளிது.