எண்ணாகமம் 11:13-23 - WCV
13
இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, “உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்” என்றும் கேட்கிறார்களே?
14
நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது: இது எனக்கு மிகப்பெரும் பளு.
15
இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்: உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.
16
ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா: அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்: அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்து வா: அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும்.
17
நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்: உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்: நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.
18
மக்களிடம் சொல்: நாளை உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்: நீங்கள் இறைச்சி உண்பீர்கள்: ஆண்டவரின் செவிகளில்பட, “நமக்கு உண்ணஇறைச்சி யார் தருவார்? எகிப்தில் எங்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்தது!” என்று அழுதிருக்கிறீர்கள்: எனவே ஆண்டவர் உங்களுக்கு இறைச்சி தருவார், நீங்கள் உண்பீர்கள்.
19
ஒரு நாள், இரண்டு நாள், ஐந்து நாள், பத்து நாள், இருபது நாள் அல்ல,
20
அது உங்கள் மூக்கில் வெளி வந்து உங்களுக்குத் திகட்டிப்போகும்வரை ஒரு மாதம் முழுதும் உண்பீர்கள்: ஏனெனில் உங்களிடையே இருக்கும் ஆண்டவரை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள்: “ ஏன் நாங்கள் எகிப்திலிருந்து வந்தோம்?” என்று கூறி அவர்முன் நீங்கள் அழுதிருக்கிறீர்கள்.
21
ஆனால் மோசே கூறியது: என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்: “அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன்” என்று நீர் சொல்லியிருக்கிறீர்.
22
அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கும்படி ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும் அடிக்கப்படுமோ? அல்லது அவர்களுக்குப் போதுமான அளவில் கடலின் மீன்கள் எல்லாம் அவர்களுக்காகப் பிடித்துச் சேர்க்கப்படுமோ?
23
ஆண்டவர் மோசேயிடம், “ஆண்டவரின் கை குறகிவிட்டதா? இப்போது எனது வார்த்தையின்படியே உங்களுக்கு நடக்குமா, இல்லையா என்று பார்” என்றார்.