செப்பனியா 2:8-15 - WCV
8
மோவாபின் பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்: அவர்கள் என் மக்களை இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.
9
ஆதலால், படைகளின் ஆண்டவரும், இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்: மோவாபு சோதோமைப்போல் ஆகும்: அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்: இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்: என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.
10
அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே: ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்: வீம்பு பேசினார்கள்.
11
ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்: நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர்.
12
எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.
13
வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்: நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.
14
அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்: தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்: பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்: நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்: கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.
15
“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.