1
“சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!
2
கல்னேக்குப் போய்ப் பாருங்கள்: அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்: பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்: அந்த அரசுகள் உங்கள் அரசுகளை விடச் சிறந்தவையோ? உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?
3
தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்.
4
தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு!
5
அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.
6
கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள்.