லேவியராகமம் 7:11-21 - WCV
11
ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே:
12
அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால் எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள், எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள், மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள் ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும்.
13
புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.
14
ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து, ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும்.இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை.
15
நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும்.விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.
16
அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால், அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம்.
17
பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.
18
நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை மூன்றாம் நாளில் உண்பது உகந்தன்று.அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது.அது அருவருப்பானது.அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார்.
19
தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது.அதை நெருப்பில் எரிக்க வேண்டும்.மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.
20
தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
21
தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.