8
பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார்.
9
மேலும் இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை
10
நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார்.
11
காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்
12
காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும்.சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும்.
13
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால்,
14
அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
15
மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள்.ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.
16
அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார்.
17
குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார்.
18
சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
19
காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார்.