25
உடன்படிக்கையின் நீதியை நிலைநாட்டி, பழிக்குப் பழிவாங்கும் வாளை வரச்செய்வேன். உங்கள் நகர்களுக்குள் நீங்கள் வந்த பின்னர் உங்களுக்குள் கொள்ளை நோயை வரச்செய்வேன்: எதிரிகளிடம் உங்களைக் கையளிப்பேன்.
26
உணவு என்னும் ஆதரவை உங்களிடமிருந்து அகற்றிவிடுவேன்.பத்துப்பெண்கள் ஒரே அடுப்பில் அப்பம் சுட்டு அதைச் சமநிறையாகப் பங்கிட்டுப் கொடுப்பர்.நீங்கள் உண்டும் நிறைவடையமாட்டீர்கள்.
27
இதற்குப்பின்னும், நீங்கள் என் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை எனில்,
28
நான் பெரும் கோபம் கொண்டு உங்களை எதிர்த்து உங்கள் குற்றங்களுக்காக ஏழுமடங்கு தண்டிப்பேன்.
29
உங்கள் புதல்வர்களின் சதையையும் புதல்வியரின் சதையையும் தின்பீர்கள்.
30
நான் தொழுகை மேடுகளையும் தூபபீடங்களையும் தகர்த்து, உங்கள் சடலங்களை உயிரற்ற தெய்வச் சிலைகள்மீது விழச் செய்வேன்.என் உள்ளம் உங்களை வெறுக்கும்.
31
உங்கள் நகர்கள் பாலை நிலமும், உங்கள் புனித இடங்கள் பாழ்நிலமும் ஆகும். உங்கள் பலிகளின் நறுமணம் எனக்கு உவப்பாய் இராது.
32
உங்கள் எதிரிகளே அதிர்ச்சி அடையும் வகையில் அவர்கள் குடியிருக்கும் உங்கள் நாட்டைப் பாழாக்குவேன்.
33
உங்களை உலக மக்களுக்குள்ளே சிதறடித்து, உங்களை உருவின வாளால் துரத்துவேன்.உங்கள் நாடு பாழ்நிலமும் உங்கள் நகர் பாலை நிலமும் ஆகும்.
34
நாடு பாழாய்க் கிடக்கும்.அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்.அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும்.அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.
35
நீங்கள் குடியிருந்தபோது அது ஓய்வாண்டுகளிலே ஓய்வற்று இருந்தபடியால், அது பாழாய்க் கிடக்கும் காலங்களில் ஓய்வாயிருக்கும்.
36
உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன்.காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும்.வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள்.
37
வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.
38
வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள்.உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.
39
உங்களுள் எஞ்சியிருப்போர் எதிரிகளின் நாடுகளில் தங்கள் குற்றங்களாலும் தங்கள் மூதாதையரின் குற்றங்களாலும் சோர்வுற்று
40
எனக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களும், அவர்கள் மூதாதையர் செய்த குற்றங்களும்,
41
நான் அவர்களுக்கு எதிராகமாறி அவர்களை அவர்களின் எதிரிகளின் நாட்டிற்கு அனுப்பச்செய்தன.அதனை அவர்கள் அறிக்கையிட்டு, அப்போது அவர்கள் விருத்தசேதனம் அற்ற இதயத்தைத் தாழ்த்தி, குற்றத்திற்குக் கழுவாய் தேடினால்,
42
நான் யாக்கோபுடன் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும் நினைவு கூர்வேன்: நாட்டையும் நினைவுகூர்வேன்.
43
அவர்களின் செயலால் வெறுமையாய் விடப்பட்டு, பாழாய்ப்போன நிலம் தனது ஓய்வாண்டுகளை நிறைவாய் அனுபவிக்கும்: என் கட்டளைகளை ஏற்காததாலும் நியமங்களை வெறுத்ததாலும் தங்கள் தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் கழுவாய் தேடுவர்.
44
ஆயினும், அவர்கள் தங்கள் எதிரிகளின் நாட்டில் இருக்கும்பொழுது, என் உடன்படிக்கை பொருளற்றதாகி விடுமாறு நான் அவர்களை முற்றிலும் அழிக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன்.ஏனெனில், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்!
45
நான் அவர்களுடைய கடவுளாகிய வேற்றினத்தார் கண்முன்னே எகிப்திலிருந்து அவர்களின் மூதாதையரை அழைத்து வந்து அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூர்வேன், நானே ஆண்டவர்”.
46
ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயின் மூலம் அவருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட நியமங்களும் நெறிமுறைச் சட்டங்களும் இவையே!