3
நான் நோன்பிலிருந்து சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து என் தலைவராகிய கடவுளிடம் திரும்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன்.
4
என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது: “என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!
5
நாங்கள் பாவம் செய்தோம்: வழி தவறி நடந்தோம்: பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்.
6
எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவி கொடுக்கவில்லை.
7
என் தலைவரே! நீதி உமக்கு உரியது: எம்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.
8
ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
9
எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்துநின்றோம்.
10
எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.
11
நாங்களோ அவரது குரலொளியை ஏற்கவில்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும் எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12
எங்களுக்கும் எங்களை ஆண்டுவந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியதை எங்கள்மீது அவர் சுமத்தியுள்ள பெரும் துன்பத்தின் வழியாய் உறுதிப்படுத்தியுள்ளார். ஏனெனில், எருசலேமுக்கு எதிராக நிகழ்ந்ததுபோல் உலகில் வேறெங்கும் நடக்கவே இல்லை.
13
மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறே, இத்துணைத் துன்பமும் எங்கள்மேல் வந்துள்ளது. ஆயினும், நாங்கள் எங்கள் கொடிய செயல்களை விட்டொழித்து, உமது உண்மை வழியை ஏற்று, ஆண்டவரும் எம் கடவுளுமான உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை.
14
ஆகையால் ஆண்டவர் எங்களுக்கு உரிய தண்டனையைத் தயாராக வைத்திருந்தது எங்கள்மீது சுமத்தினார். ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் நீதியுள்ளவர். ஆனால், நாங்கள்தான் அவரது குரலுக்குப் பணிய மறுத்தோம்.
15
அப்படியிருக்க, எங்கள் தலைவராகிய கடவுளே! உம் மக்களை நீர் மிகுந்த ஆற்றலோடு எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, இன்றுவரை உமது பெயருக்குப் புகழ் தேடிக்கொண்டீர். நாங்களோ பாவம் செய்தோம், பொல்லாதன புரிந்தோம்.
16
ஆனால், எம் தலைவரே! உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும் உமது திருமலையுமாகிய எருசலேமைவிட்டு உம் சினமும் சீற்றமும் விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்கள் தந்தையரின் கொடிய செயல்களில் காரணமாக, எருசலேமும் உம் மக்களும் எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர்.
17
ஆகையால், எங்கள் கடவுளே! இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும் விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும். பாழாய்க் கிடக்கிற உமது தூயகத்தின்மீது தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக!
18
என் கடவுளே! செவி சாய்த்துக் கேட்டருளும்: உம் கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும் உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும். நாங்கள், எங்கள் நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்.
19
என் தலைவரே! கேளும்: என் தலைவரே! செவிகொடுத்துச் செயலாற்றும்: என் கடவுளே! உம்மை முன்னிட்டுக் காலம் தாழ்த்தாதேயும்: ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும் உமது பெயரையே தாங்கியுள்ளனர்.”