2
“மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.
3
அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர். தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன. அவர்களின் கன்னிக்கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.
4
அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா: இளையவள் பெயர் ஒகலிபா. எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.
5
ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.
6
அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
7
அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்: தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.
8
எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்: அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்: தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.
9
எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.
10
அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து, அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர். பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள். இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.
11
அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள். இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.
12
அவளும் ஆளுநர், படைத்தலைவர், பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர் ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.
13
அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன். இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.
14
ஆனால் இவள் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாக ஈடுபட்டாள். சுவரில் சிவப்பாய்த் தீட்டப்பட்ட கல்தேய நாட்டு ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
15
இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள், தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.
16
அவள் அவர்களைக் கண்டதும் அவர்கள்பால் காமுற்று கல்தேயாவிலுள்ள அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினாள்.
17
பாபிலோனியர் அவளிடம் வந்து காமப்படுக்கையில் படுத்துத் தங்கள் காமத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினர். அவர்களால் தீட்டுப்பட்டபின், அவள் அவர்களிடமிருந்து தன் மனத்தை விலக்கிக் கொண்டாள்.
18
அவள் வெளிப்படையாய்த் தன் வேசித்தனத்தில் ஈடுபட்டுத் தன் திறந்த மேனியை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பால் அவளிடமிருந்து விலகிக்கொண்டேன்: அவள் தமக்கையிடமிருந்து விலகிக்கொண்டது போலவே செய்தேன்.
19
ஆயினும் அவள் எகிப்தில் தன் இளமையில் ஈடுபட்ட வேசித்தனத்தை மனத்தில் கொண்டு இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.
20
அவள் தன் காதலர்பால் காமுற்றாள். அவாகளின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும், விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.
21
எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி, உன் இளம்கொங்கைகளோடு விளையாடிய இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.