9
மானிடா! இறைவாக்காகச் சொல்: தலைவர் கூறுவது இதுவே: ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்டதும் துலக்கப்பட்டதுமான வாள்!
10
படுகொலை செய்வதற்கென அது கூர்மையாக்கப்பட்டுள்ளது! மின்னலென ஒளிர்வதற்கென அது துலக்கப்பட்டுள்ளது! நாம் மகிழ்ச்சி கொள்வோமா? ஏனெனில், என் மக்கள் எல்லா எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் புறக்கணித்து விட்டனர்.
11
கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள் துலக்கி வைக்கப்பட்டுள்ளது: கொலைஞனின் கரத்தில் கொடுப்பதற்காகவே அவ்வாள் கூர்மையாக்கப்பட்டுத் துலக்கப்பட்டுள்ளது.
12
மானிடா! நீ ஓலமிட்டு அலறு: ஏனெனில், அது என் மக்களை நோக்கியும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரை நோக்கியும் வீசப்படும்: என் மக்களுடன் அவர்கள் அனைவரும் அவ்வாளுக்கு இரையாவர். ஆகையால் உன் மார்பிலே அறைந்து கொள்.
13
உண்மையாகவே இது ஒரு சோதனை: அவர்கள் மனமாற மறுத்தால், இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
14
மானிடா! நீயோ இறைவாக்குரை: கை கொட்டு: இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்: கொலைக்கான வாள் அது: அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.
15
அது இதயங்களைக் கலங்கச் செய்யும்: நான் வைத்துள்ள அவ்வாள் ஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும். ஆம், அது மின்னுவதற்காகக் செய்யப்பட்டது: கொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.
16
“வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு: எத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ அங்கெல்லாம் காட்டு:
17
நானும் கை கொட்டிச் சினம் தீர்த்துக்கொள்வேன். இதை உரைப்பவர் ஆண்டவராகிய நானே.
18
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
19
மானிடா! பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று நீ இரண்டு சாலைகள் அமை. அவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும். ஒரு கைகாட்டியைச் செய்து நகரக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.
20
அம்மோனியரின் இராபாவுக்கும், யூதாவின் அரண்சூழ் எருசலேமுக்கும் வாள் செல்லும் வகையில் சாலை அமை.
21
ஏனெனில் பாபிலோன் மன்னன் இரு சாலைகளும் பிரியும் சந்தியில் நிமித்தம் பார்ப்பதற்காக நிற்கிறான். அம்புகளை உலுக்கிப் போடுகிறான். குலதெய்வச் சிலைகளிடம் திருவுளம் கேட்கிறான்: ஈரலால் நிமித்தம் பார்க்கிறான்.
22
அவனது வலக்கையின் எருசலேமுக்குப் போகும்படியான குறி விழுந்தது. அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், கொலைக்கான ஓலத்தை எழுப்புவதற்கும், குரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும், வாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், மண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக் கட்டுவதற்குமான குறி விழுந்தது.
23
ஆனால், ஏற்கெனவே, ஒப்பந்தம் செய்துகொண்டர்களின் பார்வையில் இதெல்லாம் பொய்க்குறியாகத் தோன்றுகிறது. ஆனால் அவர்களது குற்றம் மறக்கப்படாமல் அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்.
24
எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்கள் குற்றம் மறக்கப்படவில்லை. நீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன. உங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் உங்கள் பாவங்கள் காணப்படுகின்றன. இங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் கைதிகளாய்ப் பிடிக்கப்படுவீர்கள்.
25
இஸ்ரயேலின் தீட்டுப்பட்ட தீய தலைவனே, உனக்கு இறுதித் தண்டனைக்கெனக் குறிக்கப்பட்ட நாள் இதோ வந்துவிட்டது.
26
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தலைப்பாகையை எடுத்துவிடு, மகுடத்தை அகற்றி விடு. இப்போதைய நிலை இனி தொடராது. தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர்.
27
நான் தரவிருப்பது அழிவு, அழிவு, அழிவு. தண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் எவரோ அவர் வரும்வரை அது நடவாது. அவருக்கே அப்பொறுப்பை அளிப்பேன்.