எரேமியா 50:33-40 - WCV
33
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்: யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து துன்புறுத்தப் படுகிறார்கள். அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும் அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்: அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்:
34
அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்: “படைகளின் ஆண்டவர்” என்பதுஅவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்: நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்: பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.
35
கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36
குறிசொல்வோர் மேல் வாள் வரும்: அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்: அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்: அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
37
அதன் குதிரைகள்மேலும், தேர்கள் மேலும் அதன் நடுவே இருக்கும் கூலிப் படைகள்மேலும் வாள் வரும்: அவர்கள் பேடிகள் ஆவார்கள்: அதன் செல்வங்கள் அனைத்தின் மேலும் வாள் வரும்: அவை கொள்ளையடிக்கப்படும்.
38
அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்: அவை வறண்டுபோகும்: அது சிலைகள் மலிந்த நாடு: அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.
39
எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்: தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை: காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.
40
கடவுள் சோதோம், கொமோராவையும் அவற்றின் அண்டை நகர்களையும் வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல், அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்: எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர்.