21
மெரத்தாயிம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு: பெக்கோதின் குடிகளை எதிர்த்துமுன்னேறு: அவர்களை வெட்டி வீழ்த்து: முற்றிலும் அழித்துப்போடு: நான் கட்டளையிட்ட அனைத்தையும் நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.
22
நாட்டில் போரின் ஆரவாரம் கேட்கின்றது: பேரழிவின் கூக்குரல் ஒலிக்கின்றது.
23
மண்ணுலகு முழுவதற்கும் சம்மட்டியாய்த் திகழ்ந்தது நொறுங்கித் தூள்தூளானது எப்படி! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு!
24
பாபிலோனே, நான் உனக்குக் கண்ணி வைத்தேன்: தெரியாமலே நீ அதில் மாட்டிக் கொண்டாய்: நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்: ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.
25
ஆண்டவர் தம் படைக்கலக் கொட்டிலைத் திறந்து விட்டார்: தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை வெளிக்கொணர்ந்தார்: கல்தேயர் நாட்டில் படைகளின் ஆண்டவராகிய கடவுள் ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.
26
எல்லாத் திக்குகளினின்றும் அதை எதிர்த்து வாருங்கள்: அதன் களஞ்சியங்களை உடைத்துத்திறங்கள்: தானியக் குவியல்போல அதைக் குவித்து வையுங்கள்: அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்: அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.
27
அதன் காளைகள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துங்கள்: அவை கொலைக்களத்திற்குச் செல்லட்டும்: அவற்றுக்கு ஐயோ கேடு! அவற்றின் நாள் வந்துவிட்டது: அவற்றின் தண்டனைக் காலம் நெருங்கிவிட்டது.
28
இதோ! அவர்கள் பாபிலோனிய நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்: தம்கோவிலை முன்னிட்டு நம் ஆண்டவராகிய கடவுள் பழி வாங்கியதைச் சீயோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.
29
வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்: அதை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள். ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்: அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்: அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்: ஏனெனில், இஸ்ரயேலின் தூயவராகிய ஆண்டவருக்கு எதிராக அது இறுமாப்புடன் நடந்து கொண்டது.
30
எனவே அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்: அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
31
இறுமாப்புக் கொண்டவனே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். உனது நாள் வந்துவிட்டது: உன்னை நான் தண்டிக்கும் காலம் நெருங்கி விட்டது.
32
இறுமாப்புக் கொண்டவன் இடறிக் கீழே விழுவான்: அவனைத் தூக்கிவிட யாரும் இலர்: அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்: சுற்றிலும் உள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.
33
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்: யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து துன்புறுத்தப் படுகிறார்கள். அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும் அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்: அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்:
34
அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்: “படைகளின் ஆண்டவர்” என்பதுஅவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்: நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்: பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.
35
கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36
குறிசொல்வோர் மேல் வாள் வரும்: அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்: அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்: அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
37
அதன் குதிரைகள்மேலும், தேர்கள் மேலும் அதன் நடுவே இருக்கும் கூலிப் படைகள்மேலும் வாள் வரும்: அவர்கள் பேடிகள் ஆவார்கள்: அதன் செல்வங்கள் அனைத்தின் மேலும் வாள் வரும்: அவை கொள்ளையடிக்கப்படும்.
38
அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்: அவை வறண்டுபோகும்: அது சிலைகள் மலிந்த நாடு: அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.
39
எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்: தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை: காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.
40
கடவுள் சோதோம், கொமோராவையும் அவற்றின் அண்டை நகர்களையும் வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல், அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்: எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர்.
41
இதோ! வடக்கினின்று ஓர் இனம் வருகின்றது: வலிமை வாய்ந்த மக்களினமும் மன்னர் பலரும் மண்ணுலகின் கடை எல்லைகளினின்று கிளர்ந்தெழுகின்றனர்.
42
அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே பாபிலோன்! அவர்கள் போருக்கு அணி வகுத்துக் குதிரைகள்மீது சவாரி செய்து கொண்டு உனக்கு எதிராய் வருகின்றார்கள்.
43
அவர்கள் வரும் செய்திபற்றிக் கேள்வியுற்ற, பாபிலோனிய மன்னனின் கைகள் தளர்ந்துபோயின: கடுந்துயர் அவனை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப்போல் அவன் தவிக்கின்றான்.
44
யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன். நான் தேர்ந்து கொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக்கேட்பவன் யார்? எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்?
45
எனவே பாபிலோனுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், கல்தேய நாட்டுக்கு எதிராக அவர் கொண்டுள்ள எண்ணங்களுக்கும் செவிகொடுங்கள்: மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்: ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
46
பரிபலோனுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்: அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவே கேட்கும்.