10
நீங்கள் இந்த நாட்டிலேயே தொடர்ந்து குடியிருந்தால், நான் உங்களைக் கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்க மாட்டேன்: நிலை நாட்டுவேனேயன்றி, பிடுங்கி எறிய மாட்டேன். ஏனெனில் நான் உங்களுக்கு அளித்துள்ள தண்டனைபற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்.
11
நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு இனி அஞ்சவேணடாம், நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆணடவர். ஏனெனில் உங்களை மீட்கும் பொருட்டும், அவனுடைய கையினின்று உங்களை விடுவிக்கும் பொருட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்.
12
நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவனும் உங்கள்மீது மனமிரங்கி, உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான்.
13
ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, “இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம்.
14
நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம். அங்கே போர் இருக்காது: போர்முரசு ஒலிக்காது: உணவுப் பஞ்சம் இராது: நாங்கள் அங்கேயே குடியிருப்போம்” என்று கூறுவீர்களானால்,
15
யூதாவில் எஞ்சியிருப்போரே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எகிப்துக்குச் சென்று, அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருந்தால்,
16
உங்களை இங்கு அச்சுறுத்தும் அதே வாள் எகிப்து நாட்டிலும் உங்களைத் துரத்திவந்து தாக்கும்: உங்களுக்குத் திகிலூட்டுகின்ற பஞ்சம் உங்கள் பின்னாலேயே எகிப்துக்கும் தொடர்ந்துவரும்: நீங்கள் அங்கேயே மடிவீர்கள்.
17
எகிப்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்க முடிவு செய்துள்ள ஆள்கள் அனைவரும் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவர். அவர்களுள் ஒருவனும் எஞ்சியருக்கமாட்டான்: நான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையினின்று எவனுமே தப்பமாட்டான்.
18
ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: என் சினமும் சீற்றமும் எருசலேமின் குடிகள்மீது வெகுண்டெழுந்ததுபோன்று, நீங்கள் எகிப்துக்குச் செல்லும்பொழுது என் சீற்றம் உங்கள்மீது மூண்டெழும். நீங்கள் சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவீர்கள். நீங்கள் இந்த இடத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.