எரேமியா 37:11-21 - WCV
11
பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.
12
அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார்.
13
அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, “நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்” என்று கூறி, அவரைப் பிடித்தான்.
14
அதற்கு எரேமியா, “அது பொய். நான் கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை” என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான்.
15
தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்: ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.
16
எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.
17
அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, “ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?” என்று வினவினான். அதற்கு எரேமியா, “ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்” என்றார்.
18
தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது: “உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்?
19
“உங்கள்மீதோ இந்நாட்டின் மீதோ பாபிலோனிய மன்னன் படையெடுத்து வரமாட்டான் என்று அறிவித்த உங்கள் இறைவாக்கினர் இப்போது எங்கே?
20
என் தலைவரே! என் அரசரே! தயவு செய்து எனக்குச் செவிகொடும்: என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன்.”
21
பின்னர் அரசன் செதேக்கியா கட்டளையிடவே, எரேமியா காவல் கூடத்திற்கு மாற்றப்பட்டார். நகரின் அப்பம் அனைத்தும் தீரும்வரை அப்பக்காரர் தெருவினின்று ஓர் அப்பம் அவருக்கு நாள்தோறும் கொடுக்கப்பட்டுவந்தது. இவ்வாறு எரேமியா காவல்கூடத்தில் தங்கியிருந்தார்.