9
யூதா நாட்டினர் எவரும் தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல், அவரவர் தம் எபிரேய அடிமைகளான ஆண், பெண் அனைவரையும விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை.
10
உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள், மக்கள் ஆகிய எல்லாரும், தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும் தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு, அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.
11
ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்: தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.
12
எனவே ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது:
13
இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உங்கள் மூதாதையரை அழைத்துவந்த நாளில் நான் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டேன்.
14
'உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்' என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை: செவி சாய்க்கவுமில்லை.
15
ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்: என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.
16
ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்: என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்: தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.
17
எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை: உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான “விடுதலை”யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிலூட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன்.