16
ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:
17
“என் தலைவராகிய ஆண்டவரே! உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! உமக்குக் கடினமானது எதுவும் இல்லை.
18
ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா! படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும்.
19
நீர் திட்டமிடுவதில் பெரியவர்: செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர்.
20
நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர்.
21
அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர்.
22
அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை-பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை-அவர்களுக்குக் கொடுத்தீர்.
23
அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலக்குச் செவிகொடுக்கவில்லை: உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை: நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர்.
24
இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன! வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்!
25
ஓ! தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, 'வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்: அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்' என்று சொல்கிறீரே! ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!”
26
பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
27
நானே ஆண்டவர்: எல்லா மக்களுக்கும் கடவுள் நானே: அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ?