எரேமியா 29:25-32 - WCV
25
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.
26
செப்பனியாவுக்கு நீ எழுதியது: ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய் இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார்.
27
அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்?
28
இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, 'உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்: எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்' என்று செய்தி அனுப்பியுள்ளான்.
29
இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.
30
அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
31
நாடு கடத்தப்பட்டோர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது: நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான்.
32
எனவே ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,” என்கிறார் ஆண்டவர்.