3
யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள தூதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.
4
அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்டளையிடு: இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
5
உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது: என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன்.
6
என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன்.
7
அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள்.