எரேமியா 27:2-12 - WCV
2
“ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்: கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள்.
3
யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள தூதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.
4
அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்டளையிடு: இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
5
உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது: என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன்.
6
என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன்.
7
அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள்.
8
ஆனால் பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசருக்கு அடிபணிந்து, அவனது நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்க மனமில்லாத மக்களினத்தையோ அரசையோ-அவனுடைய கையில் அவற்றை நான் ஒப்புவிக்கும்வரை-வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றால் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
9
நீங்களோ 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணியாதீர்கள்' என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் இறைவாக்கினர், குறிசொல்வோர், கனவுக்காரர், மந்திரவாதி, சூனியக்காரர் ஆகியோருக்குச் செவி கொடாதீர்கள்.
10
ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்: நீங்கள் அழிந்து போவீர்கள்.
11
ஆனால், பாபிலோனிய மன்னனின் நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்று, அவனுக்கு அடிபணியும் எந்த இனத்தையும் அதன் சொந்த நாட்டிலேயே நான் விட்டு வைப்பேன். அந்த இனம் உழுது பயிரிட்டு அங்கேயே குடியிருக்கும், என்கிறார் ஆண்டவர்.”
12
யூதாவின் அரசனான செதேக்கியாவிடமும் இதே போன்று பேசினேன்: “பாபிலோனிய மன்னனின் நுகத்துக்கு உங்கள் கழுத்தை நீட்டுங்கள்: அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் அடிபணியுங்கள். அப்படியானால் நீங்கள் பிழைப்பீர்கள்.