15
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.
16
நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.
17
அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.
18
எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன்.
19
எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,
20
அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,
21
ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,
22
தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,
23
தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,
24
அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,
25
சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும்,
26
ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு மன்னனும் குடிப்பான்.
27
இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதவே: “குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்: கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்: எழவே மாட்டீர்கள்” என்று நீ அவர்களிடம் கூறு.
28
உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால், “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்” என்று அவர்களிடம் கூறு.
29
இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
30
ஆகவே அவர்களுக்கு எதிராக இச்சொற்களை எல்லாம் இறைவாக்காக உரை: “ஆண்டவர் மேலிருந்து கர்ச்சனை செய்வார்: தமது தூய உறைவிடத்திலிருந்து குரல் எழுப்புவார்: தம் இருப்பிடத்திலிருந்து கடுமையாகக் கர்ச்சனை செய்வார்: திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல் பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும் குரல் எழுப்புவார்.
31
அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்: ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறார்: அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்: தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.”
32
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! தீமை நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது. பூவுலகின் எல்லைகளிலிருந்து பெரும் புயலொன்று புறப்பட்டுப் போகின்றது.
33
அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.
34
மேய்ப்பர்களே! ஒப்பாரி வையுங்கள்: கதறியழுங்கள். மந்தையின் தலைவர்களே! சாம்பலில் புரளுங்கள். ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும் சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன. விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல், நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.
35
மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.
36
மேய்ப்பர்களின் ஆழுகுரலும் மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே! ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை அழித்து விட்டார்.
37
ஆண்டவரின் கோபக்கனலால் அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின.
38
தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.