15
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.
16
நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.
17
அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.
18
எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன்.
19
எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,
20
அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,
21
ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,
22
தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,
23
தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,
24
அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,
25
சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும்,
26
ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு மன்னனும் குடிப்பான்.
27
இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதவே: “குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்: கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்: எழவே மாட்டீர்கள்” என்று நீ அவர்களிடம் கூறு.