எரேமியா 20:7-18 - WCV
7
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.
8
நான் பேசும்போதெல்லாம் “வன்முறை அழிவு” என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
9
“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
10
“சுற்றிலும் ஒரே திகில்!” என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்: “பழிசுமத்துங்கள்: வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்” என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்: “ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்: நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்” என்கிறார்கள்.
11
ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை: அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது.
12
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே: நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்: ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
13
ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
14
நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்: என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள் ஆசி பெறாதிருக்கட்டும்.
15
“உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த மனிதன் சபிக்கப்படுக!
16
அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகர்களுக்கு ஒப்பாகட்டும். அவன் காதில் காலையில் அழுகைக் குரலும் நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்!
17
தாய் வயிற்றில் நான் இருந்தபோதே, அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை? என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே! அவள் கருவறையிலேயே என்றும் இருந்திருப்பேனே!
18
கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன்? துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ?