ஏசாயா 7:1-6 - WCV
1
உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.
2
'சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது' என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது: உடனே பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வுகொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர்நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன.
3
அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: “நீ உன் மகன் செயார் யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்:
4
“நீ அமைதியாய் இரு: அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்: இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக்கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள்.
5
சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,
6
'யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச்சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்: அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப்பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்' என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.”