ஏசாயா 61:3-11 - WCV
3
சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் “புகழ்” என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். “நேர்மையின் தேவதாருகள்” என்றும் “தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை” என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.
4
நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை அவர்கள் கட்டியெழுப்புவார்கள்: முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை நிலைநிறுத்துவார்கள்: தலைமுறை தலைமுறையாக இடிந்து அழிந்துகிடந்த நகர்கறைச் சீராக்குவார்கள்.
5
அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்: வேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும் திராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.
6
நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்: நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்: பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்பீர்கள்: அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.
7
அவமானத்திற்குப் பதிலாக நீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்: அவமதிப்புக்குப் பதிலாக உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்: ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம் இருமடங்காகும்: முடிவில்லா மகிழ்ச்சியும் உங்களுக்கு உரியதாகும்.
8
ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்: கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கின்றேன்: அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்: அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வேன்:
9
அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்: அவர்களை காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.
10
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
11
நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.