2
உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன: உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.
3
உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன: உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன: உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.
4
நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை: உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை: வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.
5
நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்: சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்: அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்: உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.
6
அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா: அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்: அவர்களின் செயல்கள் தீயின: அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!
7
தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன: குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்: அவர்கள் எண்ணங்கள் தீயவை: பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.
8
அமைதி வழியை அவர்கள் அறியார்: நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை: தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்: அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.