ஏசாயா 54:1-5 - WCV
1
பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு: பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு: ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர்.
2
உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு: உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு: உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு: உன் முளைகளை உறுதிப்படுத்து.
3
வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்: உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்: பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.
4
அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்: வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்: உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.
5
ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,”படைகளின் ஆண்டவர்” என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்: “உலக முழுமைக்கும் கடவுள்” என அவர் அழைக்கப்படுகின்றார்.