1
மோவாபைப் பற்றிய திருவாக்கு: ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால் மோவாபும் அழிக்கப்படும். ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால், மோவாபும் அழிக்கப்படும்.
2
தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்: நெபோ, மேதாபா நகரங்களைக்குறித்து மோவாபு அலறி அழுகின்றது: அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டதாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று.
3
அதன் தெருக்களில் நடமாடுவோர் சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்: வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள யாவரும் ஓலமிட்டு அழுகின்றனர். விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர்.
4
எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர். யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது: படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள், ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான்.
5
மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது: அதன் அகதிகள் சோவாருக்கும் எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்: ஏனெனில் அவர்கள் லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் அழுதுகொண்டு செல்கின்றனர்: ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்: