நீதிமொழிகள் 23:29-35 - WCV
29
துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
30
திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,
31
மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்:
32
பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்: விரியனைப் போலத் தீண்டும்.
33
உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்: உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.
34
கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.
35
“என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை: நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்” என்று நீ சொல்வாய்.