
சங்கீதம் 22:1-21 - WCV
1
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
2
என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்: நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்: எனக்கு அமைதி கிடைப்பதில்லை.
3
நீரோ தூயவராய் விளங்குகின்றீர்: இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்:
4
எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்: அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.
5
உம்மை அவர்கள் வேண்டினார்கள்: விடுவிக்கப்பட்டார்கள்: உம்மை அவர்கள் நம்பினார்கள்: ஏமாற்றமடையவில்லை.
6
நானோ ஒரு புழு, மனிதனில்லை: மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்: மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
7
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8
'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும" என்கின்றனர்.
9
என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே: என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்துவரும் நீரே!
10
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்: நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே!
11
என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்: ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது: மேலும், உதவி செய்வார் யாருமில்லை.
12
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன: பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.
13
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.
14
நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.
15
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.
16
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்: என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
17
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
18
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
20
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்: இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்:
21
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்: காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.