4
மண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்? உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?
5
அதற்கு அளவு குறித்தவர் யார்? உனக்குத்தான் தெரியுமே! அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?
6
எதன்மேல் அதன் தூண்கள் ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்?
7
அப்போது வைகறை விண்மீன்கள் ஒன்றிணைந்து பாடின! கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!
8
கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?
9
மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி,
10
எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி
11
'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல: உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!" என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?
12
உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?
13
இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுளிருந்து உதறித்தள்ளுமே!
14
முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.
15
அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்: அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.
16
கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?
17
சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ?
18
அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!
19
ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?
20
அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!
21
ஆம், அறிவாய்: அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்: ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!
22
உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?
23
இடுக்கண் வேளைக்கு எனவும் கடும் போர், சண்டை நாளுக்கு எனவும் அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.
24
ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது? கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?
25
வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்? இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?
26
மனிதர் வாழா மண்ணிலும் மாந்தர் குடியிராப் பாலையிலும் மழை பெய்வித்துப்
27
பாழ்வெளிக்கும் வறண்ட நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப் பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?
28
மழைக்குத் தந்தை உண்டோ? பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?
29
பனிக்கட்டி யாருடைய உதரத்தில் தோன்றுகின்றது? வானின் மூடுபனியை ஈன்றெடுப்பவர் யார்?
30
கல்லைப்போல் புனல் கட்டியாகிறது: ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.
31
கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ? மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?
32
குறித்த காலத்தில் விடிவெள்ளியைக் கொணர்வாயோ? வடதிசை விண்மீன் குழுவுக்கு வழி காட்டுவாயோ?
33
வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ? அதன் ஒழுங்கை நானிலத்தில் நிலைநாட்டிடுவாயோ?
34
முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ? தண்ணீர்ப் பெருக்கு உன்னை மூடச் செய்வாயோ?
35
'புறப்படுக' என மின்னலுக்கு ஆணையிடுவாயோ? 'இதோ! உள்ளோம்' என அவை உனக்கு இயம்புமோ?
36
நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்? சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?
37
ஞானத்தால் முகில்களை எண்ணக் கூடியவர் யார்? வானத்தின் நீர்க்குடங்களைக் கவிழ்ப்பவர் யார்?
38
துகள்களைச் சேர்த்துக் கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?
39
பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ? அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?
40
குகைகளில் அவை குறுகி இருக்கையிலே, குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.
41
காக்கைக் குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கரையும் போது, அவை உணவின்றி ஏங்கும்போது, காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?