11
எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு, மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.
12
தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,
13
இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும்,
14
வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே:
15
செல்வத்தை விழுங்கினர்: அதை அவர்களே கக்குவர்: இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.
16
விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்: கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.
17
ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும், தேன், வெண்ணெய் ஆறுகளிலும் அவர்கள் இன்பம் காணார்.
18
தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்: அதை அவர்கள் உண்ணமாட்டார்: வணிகத்தின் வருவாயில் இன்புறார்.
19
ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்: தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.
20
அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை: ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார்.
21
அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை: எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது.
22
நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்: அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும்.
23
அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்: அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.
24
அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்: ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே!
25
அவர்கள் அதைப் பின்புறமாக இழப்பர்: மின்னும் முனை பிச்சியிலிருந்து வெளிவரும்: அச்சம் அவர்கள் மேல் விழும்.
26
காரிருள் அவர்களது கருவூலத்திற்குக் காத்திருக்கும்: மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்: அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.
27
விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்: மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்.
28
அவர்களது இல்லத்தின் செல்வம் சூறையாடப்படும்: இறைவனின் வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.
29
இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு: அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.