2இராஜாக்கள் 5:20-27 - WCV
20
கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, “என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன்” என்று சொல்லிக் கொண்டான்.
21
எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், “என்ன, எல்லாம் நலமா?” என்று வினவினார்.
22
அவன் மறுமொழியாக, “ஆம், எல்லாம் நலமே! என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, 'இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்' என்று சொல்லச் சொன்னார்” என்றான்.
23
அதற்கு நாமான், “எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம்வையும்” என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.
24
கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.
25
அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, “கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அவன், “அடியேன் எங்கும் செல்லவில்லை” என்றான்.
26
அதற்கு அவர், “அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள்- இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்?
27
எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்!” என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.