17
ஆயினும் அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர்.
18
அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால் அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.
19
அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, “நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்: பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே:
20
உனது துணிச்சலின் காரணம் என்ன? வெறும் சொற்கள் போர்த் தந்திரமும் வீரமும் ஆகிவிடுமா? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறாய்?
21
இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான்.
22
நீ ஒருவேளை, 'எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்' என்று சொல்லலாம். ஆனால் யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் பார்த்து, 'நீங்கள் எருசலேமிலிருக்கும் இப்பலிபீடத்தில் மட்டும் வழிபடுங்கள்' என்று கட்டளையிட்டபொழுது எசேக்கியாவாகிய நீ அவருடைய தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் அழிக்கவில்லையா?
23
இப்பொழுது என் தலைவராகிய அசீரிய மன்னன் சார்பாகச் சவால் விடுக்கிறேன். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். அவற்றுக்குத் தேவையான குதிரை வீரர்களை உன்னால் தர முடியுமா?
24
தேர்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தை நம்பியிருக்கும் உன்னால் என் தலைவரின் பணியாளருள் கடையனான ஒரு படைத் தலைவனைக் கூட எதிர்த்து நிற்க முடியுமா?
25
ஆண்டவரின் திருவுளம் அறியாமலா நான் இவ்விடத்தை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, 'நீ புறப்பட்டுச் சென்று அந்நாட்டை அழித்துவிடு' என்று கூறியுள்ளார்” என்றான்.
26
அப்போது இல்க்கியாவின் மகன் எலியாக்கிமும், செபுனாவும், யோவாகும் இரப்சாக்கேயை நோக்கி, “உம் பணியாளராகிய எங்களோடு சிரியா மொழியிலேயே பேசும். அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் இருக்கும் மக்கள் காதில் விழும்படியாக யூத மொழியில் எங்களோடு பேச வேண்டாம்” என்றனர்.
27
அதற்கு அவன் அவர்களிடம், “என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடித்து உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும்” என்றான்.
28
இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: “மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.
29
அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.
30
அவன், 'ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி. இந்நகர் அசீரிய மன்னனின் கையில் ஒப்பவிக்கப்படாது' என்று கூறி உங்களை ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்வான்.
31
எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில் அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.
32
பின் நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு, தானியமும் திராட்சைக் கனியும் மிக்க நாட்டுக்கு, அப்பமும் திராட்சைத் தோட்டமும் மிகுந்த நாட்டுக்கு, ஒலிவ மரங்களும் தேனும் மிகுந்த நாட்டுக்கு, உங்களை அழைத்துச் செல்வேன். நீங்கள் சாகாமல் உயிரோடு இருக்கப் பாருங்கள். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று கூறி உங்களை ஏமாற்றும் எசேக்கியாவுக்குச் செவி கொடாதீர்கள்.
33
எந்த ஒரு நாட்டின் தெய்வமாவது தன் நாட்டை அசீரிய மன்னரிடமிருந்து மீட்டதுண்டா?
34
ஆமாத்து, அர்ப்பாது நகர்களின் தெய்வங்கள் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் தெய்வங்கள் எங்கே? அவை சமாரியாவை என் கையினின்று விடுத்தனவா?
35
அத்தனை நாடுகளின் தெய்வங்களில் ஒன்றாவது தன் நாட்டை என் கையினின்று விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, ஆண்டவரால் எவ்வாறு எருசலேமை என் கையினின்று விடுவிக்க முடியும்?”
36
ஆனால் மக்கள் மௌனமாய் இருந்தனர். ஒரு வார்த்தைகூடப் பதில் கூறவில்லை. ஏனெனில், 'அவனுக்கு ஒரு பதிலும் கூறவேண்டாம்' என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.
37
பின்பு அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும், பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் தம் ஆடைகளைக் கிழித்து விட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து, இரப்சாக்கே கூறியவற்றை அவருக்குத் தெரிவித்தனர்.