ஆதியாகமம் 6:13-22 - WCV
13
அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன்.ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது.இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
14
உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்: அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15
பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது: நீளம் முந்நூறு முழம்: அகலம் ஐம்பது முழம்: உயரம் முப்பது முழம்.
16
பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி: பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை.பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.
17
நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன்.மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.
18
உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்.உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.
19
உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா.அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.
20
வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.
21
உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள்.அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”
22
கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.