<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>WCV</title>
  <subtitle>யோபு அத்தியாயம் 5</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/tsk-tamil-reference-bible/biblerss/wcv/18/5/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/wcv/18-யோபு/5-chapter.html?ord=081926" />
  <id>tag:/truthintamil.com,2026-08-19:20260819</id>
  <updated>2026-08-19T14:14:54+00:00</updated>
  	<entry>
      	<title>யோபு அத்தியாயம் 5</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/wcv/18-யோபு/5-chapter.html?ord=081926" />
          <id>tag:/truthintamil.com,2026-08-19:20260819</id>
          <updated>2026-08-19T14:14:54+00:00</updated>
          <summary>
				இப்போது கூப்பிட்டுப்பாரும்! யார் உமக்குப் பதிலுரைப்பார்? எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?
				உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்: பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,
				அறிவிலி வேரூன்றுவதை நானே கண்டேன்: ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,
				அவனுடைய மக்களுக்கப் பாதுகாப்பு இல்லை: ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்: மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.
				அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்: முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்: பேராசைக்காரர் அவன் சொத்துக்காகத் துடிப்பர்.
				ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது: மண்ணினின்று இன்னல் விளையாது.
				நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல, துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.
				ஆனால், நான் கடவுளையே நாடுவேன்: அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.
				ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத்தக்கனவற்றையும் செய்பவர் அவரே.
				மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.
				அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்: அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.
				வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்: அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.
				ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்: வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன:
				அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்: நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.
				அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்: எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.
				எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு: அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.
				இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்: ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.
				காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே: அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.
				ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்: ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.
				பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.
				நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்: நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.
				அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்: மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.
				வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்: காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.
				உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்: உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.
				உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப்புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.
				பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர், பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.
				இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்: நீவிரே கண்டுணர்வீர்.
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>