1 | சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார். இக்கூற்று உண்மையானது. |
2 | ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவி கொண்டவராயும், அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும். |
3 | அவர் குடிவெறிக்கும் வன்முறைக்கும் இடங்கொடாது, கனிந்த உள்ளத்தவராய் இருக்க வேண்டும்: சண்டையையும் பொருளாசையையும் தவிர்ப்பவராக இருக்க வேண்டும்: |
4 | தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். |
5 | தமது சொந்தக் குடும்பத்தை நடத்தத் தெரியாத ஒருவரால், கடவுளின் சபையை எவ்வாறு கவனிக்க முடியும்? |
6 | திருச்சபையில் புதிதாகச் சேர்ந்த ஒருவர் கண்காணிப்பாளராகக் கூடாது. அவ்வாறு ஆவாரானால் அவர் தற்பெருமை கொள்ளலாம். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அவர் அடைய நேரிடும். |
7 | சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் நற்சான்று பெற்றவராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இழி சொல்லுக்கு ஆளாகலாம்: அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம். |
8 | அவ்வாறே திருத்தொண்டர்களும் கண்ணியமுடையவர்களாக இருக்க வேண்டும்: இரட்டை நாக்கு உள்ளவர்களாகவும் குடிவெறிக்கு அடிமைப்பட்டவர்களாகவும் இருத்தலாகாது. எச்சரிக்கை! |
9 | தூய மனச்சான்று உடையவர்களாய் விசுவாசத்தின் மறைபொருளைக் காத்து வர வேண்டும். |
10 | முதலில் இவர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குறையற்றவர்கள் எனக் காணப்பட்டால் திருப்பணியாற்றலாம். |
11 | அதுபோலவே பெண்களும் கண்ணியமுடையவராயும் புறங்கூறாதவராயும் அறிவுத்தெளிவு உடையவராயும் எல்லாவற்றிலும் நம்பத்தக்கவராயும் இருக்கவேண்டும். |
12 | திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும், பிளளைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவாகளாயும் இருக்கவேண்டும். |
13 | நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயர் மதிப்புப் பெறுவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையைக் குறித்து அதிகத் துணிவோடு பேசுவர். |
14 | நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன் இவற்றை உனக்கு எழுதுகிறேன். |
15 | நான் வரக் காலந்தாழ்த்தினால், நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை: இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது. |
16 | நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு: “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்: தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்: வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்: உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்: மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்” |