1 | சகோதர சகோதரிகளே! இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. |
2 | ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். |
3 | “எங்கும் அமைதி, ஆபத்து இல்லை” என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்: யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது. |
4 | ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல: ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. |
5 | நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. |
6 | ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது: விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். |
7 | உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்: குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர். |
8 | ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம். |
9 | ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். |
10 | நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார். |
11 | ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்: ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள். |
12 | சகோதர சகோதரிகளே! உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். |
13 | அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள். உங்களிடையே அமைதி நிலவட்டும். |
14 | அன்பர்களே! நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்: மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்: வலுவற்றோர்க்கு உதவுங்கள்: எல்லாரோடும் பொறுமையாயிருங்கள். |
15 | எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள். |
16 | எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். |
17 | இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். |
18 | எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. |
19 | தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். |
20 | இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். |
21 | அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். |
22 | எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். |
23 | அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக! |
24 | உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார். |
25 | சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள். |
26 | தூய முத்தம் கொடுத்துச் சகோதரர் சகோதரிகள் எல்லாரையும் வாழ்த்துங்கள். |
27 | அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன். |
28 | நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! |