| 1 | தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். |
| 2 | என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார். |
| 3 | அவர் என்னிடம், “நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்” என்றார். |
| 4 | நானோ, “வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது: என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது” என்றேன். |
| 5 | யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்: அவர் இப்பொழுது உரைக்கிறார்: |
| 6 | அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன். |
| 7 | மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும் நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும் ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: “உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும் உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும் அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்: தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்.” |
| 8 | ஆண்டவர் கூறுவது இதுவே: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்: விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்: நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். |
| 9 | சிறைப்பட்டோரிடம், “புறப்படுங்கள்” என்றும் இருளில் இருப்போரிடம் “வெளிப்படுங்கள்” என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்: வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர். |
| 10 | அவர்கள் பசியடையார்: தாகமுறார்: வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்: அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். |
| 11 | என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்: என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும். |
| 12 | இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்: சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். |
| 13 | வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார். |
| 14 | சீயோனோ, “ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்: என் தலைவர் என்னை மறந்து விட்டார்” என்கிறாள். |
| 15 | பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். |
| 16 | இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன. |
| 17 | உன் பிள்ளைகள் விரைந்து வருவர்: உன்னை அழித்துப் பாழாக்கியோரும் உன்னை விட்டுப் போய்விடுவர். |
| 18 | உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்: என் உயிர்மேல் ஆணை! நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்துகொள்வாய்: மணப்பெண் அணிவதுபோல் அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர். |
| 19 | பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன உன் நாட்டின் பகுதிகள் இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு மிகவும் குறுகியதாயிருக்கும்: முன்பு உன்னை விழுங்கியவர் உன்னைவிட்டு வெகு தொலைவுக்குச் செல்வர். |
| 20 | உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில் “இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது: நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்” என்பர். |
| 21 | அப்போது நீ, “இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்? நான் பிரிவுத் துயரால் வாடினேன்! மலடியாய் இருந்தேன்! நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்! அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்? நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க, எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?” என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வாய். |
| 22 | என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: 'வேற்றினத்தாருக்கு நேராக என் கையை உயர்த்துவேன்: மக்களினங்களை நோக்கி என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்: அவர்கள் உன் புதல்வரை மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்: உன் புதல்வியரைத் தம் தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர். |
| 23 | அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்: அவர்கள் அரசியர் உங்கள் செவிலித் தாயர் ஆவர்: முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அவர்கள் உன்னை வணங்குவர்: உன் காலடிப் புழுதியை நக்குவர்: நானே ஆண்டவர் என்பதையும், எனக்காகக் காத்திருப்போர் வெட்கமடையார் என்பதையும் அப்பொழுது நீ அறிந்து கொள்வாய். |
| 24 | வலியோனின் கையினின்று, கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா? வெற்றி வீரனிடமிருந்து, சிறைப்பட்டோர் தப்ப இயலுமா? |
| 25 | ஆண்டவர் கூறுவது இதுவே: சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து விடுவிக்கப்படுவர்: கொள்ளைப்பொருள் கொடியவன் கையினின்று மீட்கப்படும்: உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் போராடுவேன்: உன் பிள்ளைகளை விடுவிப்பேன். |
| 26 | உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்: அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்: அப்பொழுது மானிடர் யாவரும், நானே ஆண்டவர், உன் விடுதலையாளர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர்' என்று அறிந்து கொள்வர். |