<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
	<title>WCV</title>
  <subtitle>சங்கீதம் அத்தியாயம் 102</subtitle>
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/biblerss/wcv/19/102/atom.raw" rel="self" />
  <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/wcv/19-சங்கீதம்/102-chapter.html?ord=061826" />
  <id>tag:/truthintamil.com,2026-06-18:20260618</id>
  <updated>2026-06-18T09:25:09+00:00</updated>
  	<entry>
      	<title>சங்கீதம் அத்தியாயம் 102</title>
          <link href="https://truthintamil.com/tamil-bible/read-bible/standard/wcv/19-சங்கீதம்/102-chapter.html?ord=061826" />
          <id>tag:/truthintamil.com,2026-06-18:20260618</id>
          <updated>2026-06-18T09:25:09+00:00</updated>
          <summary>
				ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!
				நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!
				என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன: என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன.
				என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது: என் உணவையும் நான் உண்ண மறந்தேன்.
				என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன.
				நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்: பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.
				நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்: கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.
				என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்: என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர்.
				சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.
				ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்: நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர்.
				மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்: புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.
				ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்: உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
				நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்: இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
				அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர்.
				வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
				ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்: அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
				திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்: அவர்களின் மன்றாட்டை அவமதியார்.
				இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்: படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
				ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்: அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.
				அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்: சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
				சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும்: எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.
				அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.
				என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.
				நான் உரைத்தது: “என் இறiவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்: உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?
				முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!
				அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர்: அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்: அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்: அவையும் மறைந்துபோம்.
				நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது.
				உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்: அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!
			</summary>
          <author>
          	<name>தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்</name>
              <email>admin@/truthintamil.com</email>
			</author>
	</entry>
</feed>