ஆதியாகமம் 38:16-24: இந்தப் வேதப்பகுதி யூதா என்ற மனிதன் தன் விதவை மருமகளுடன் பாலுறவு கொண்ட நிகழ்வைக் கூறுகிறது. அவள் தன் கைம்பெண்மைக்குரிய துக்க வஸ்திரங்களை அணிந்திருந்ததை, வேசியின் ஆடை என்று தவறாகக் கருதி யூதா அவளுடன் உறவு கொண்டான். பின்னர் அவன் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான். இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது மிகவும் சுவாரசியமான கதை என்று ஒரு பெண்ணியவாதி கூறுகிறார். ஆனால், அவர் முழுக் கதையையும் புறக்கணித்துவிட்டு, கதையில் ஆங்காங்கே சில குறிப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு குற்றம் கண்டுபிடிப்பது சரியல்ல. ஆகவே, நாம் இதன் முழுக் கதையையும் பார்ப்போம். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்னவென்றால், தாமார் யூதாவின் மூத்த மகனான ஏர் என்பவனை மணந்திருந்தாள். அவன் இறந்துவிட்டான். எனவே, யூதாவின் இரண்டாவது மகனான ஓனான் அவளை மணந்தான். ஆனால், அவன் தன் சகோதரனுக்குச் சந்ததியை உருவாக்க வேண்டும் என்ற இஸ்ரவேலரின் வழக்கத்தின்படி நடக்க விரும்பாததால், வேண்டுமென்றே அவளுக்குக் குழந்தை உண்டாவதற்கான வாய்ப்பை மறுத்தான். இதனால் தேவன் அவனையும் கொன்றுவிடுகிறார். தேவன் பாலினப் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும். ஏனெனில், இந்தக் கதையில் அவர் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு எந்த வகையிலும் சாதகமாக நடந்துகொள்ளவில்லை. ஓனான் தாமாருக்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறியபோது, தேவன் அவனைக் கொன்றுவிடுகிறார். தேவன் பாலியல் விஷயங்களில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது உண்மையல்ல. இங்கே அவர் ஆண்களுக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். இதற்கு மாறாக, சந்ததியை உருவாக்கும் காரியத்தில் பெண்ணின் உரிமையை தேவன் நிலைநாட்டுகிறதையே காண்கிறோம். மேலும், அவளுக்கு அநியாயஞ் செய்தவனைத் தண்டிக்கிறதையும் பார்க்கிறோம்.
தன் இரு மகன்களும் இறந்துவிட்டதால், அவர்களுடைய வழக்கத்தின்படி யூதா தனது மூன்றாவது மகனைத் தாமாருக்குத் திருமணம் செய்துகொடுக்க வேண்டும். ஆனால், மூன்றாவது மகனும் இறந்துவிடுவானோ என்று அஞ்சி அவன் அதைச் செய்யவில்லை. யூதா அவளை அவளுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இங்கே கவனிக்க வேண்டிய முதலாவது முக்கியமான காரியம் என்னவென்றால், யூதா தாமாரோடு பாலுறவு கொண்டபோது, அவள் தனது மாமனாருடன் வசிக்கவில்லை என்பதே.
இப்போது, தாமாரின் செயலுக்கான நோக்கத்தைக் காண்பதற்காகப் பின்வரும் வசனங்களை வாசித்துக்கொள்வோம்:
ஆதியாகமம் 38:11-15: “அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து...”
இந்த வசனப்பகுதியின் வாயிலாக, தாமார் கைம்பெண்ணின் வஸ்திரத்தை அணிந்திருந்தாள் என்றும், யூதாதான் முட்டாள்தனமாக அதை வேசியின் ஆடை என்று நினைத்துக்கொண்டான் என்றும் கூறுவது முற்றிலும் தவறானது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்கிறோம். தன் மாமனாகிய யூதா தன்னுடைய நகரத்துக்கு வந்திருக்கிறான் என்பதை அறிந்த தாமார், தனது கைம்பெண்மைக்குரிய ஆடைகளைக் கழற்றிவிட்டு, வேண்டுமென்றே தன்னை ஒரு வேசியைப் போலக் காட்டிக்கொண்டாள் என்பது இந்தப் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதா தனது மூன்றாவது மகனைத் தனக்குத் திருமணம் செய்துகொடுக்கவில்லை என்பதற்காக அவள் செய்த ஒருவிதமான பழிவாங்கும் செயலாகும் இது. எனவே, இந்தப் பெண்ணியவாதி வேண்டுமென்றே வேதப்பகுதியைத் தவறாகச் சித்தரித்துக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். யூதா முட்டாளும் அல்ல, தாமார் கைம்பெண்ணின் உடையிலும் இல்லை. ஒரு வேசியாக நடித்து, யூதாவைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதே தாமாரின் நோக்கமாகும். இதற்காக அவள் திட்டமிட்டு நாடகமாடினாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. லோத்தின் மகள்களின் காரியத்தைப் போலவே, இங்கேயும் தாமாரே தனது முதல் அடியை எடுத்துவைக்கிறாள். இது யூதா செய்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்தாது. அது தீயதும் இழிவானதுமாகும். ஆனால், முழு உண்மையையும் உணர்த்தும் வசனங்களை மேற்கோள் காட்டுவதை இந்தப் பெண்ணியவாதி எவ்வளவு வசதியாகத் தவிர்த்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.
"பின்னாட்களில் யூதா தாமாரைப் பற்றி அறிந்து, அவள் வேசித்தனஞ்செய்ததற்காகச் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தான். இருவரும் இணைந்து தவறான செயலில் ஈடுபடும் போது, அந்தப் பெண் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என அவன் எவ்வாறு கூறலாம்? யூதா பாலுறவில் ஈடுபடலாம், தனது தேவைக்கு ஒரு வேசியைப் பயன்படுத்தலாம், அவனைக் காட்டிலும் மிகவும் இளைய பெண்ணைக் கர்ப்பமாக்கலாம், ஆனால் அவள் மட்டுமே மரணத்திற்குத் தகுதியானவள் என்று அவன் நினைப்பது பாலினப் பாகுபாட்டினால் அல்லவா?" என்று அந்தப் பெண்ணியவாதி கேள்வி எழுப்புகிறார். ஆனால், உண்மை தெரிந்த பிறகு, யூதா அந்தப் பெண்ணைத் தன் மருமகளாக அங்கீகரித்தான்; அவள் கர்ப்பமாக இருந்தபோது அவளைத் தண்டிக்க வேண்டாம் என்று அவன் முடிவு செய்தான் (யூதாவே, "அவள் என்னைப்பார்க்கிலும் நீதிமதி" என்று ஒப்புக்கொண்டான் - ஆதி 38:26).
யூதாவுக்கும் தாமாருக்கும் இடையே என்ன நடந்ததோ, அது எவ்வித ஒளிவுமறைவுமின்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் மீண்டும் சொல்ல விரும்புகிறோம். மனிதன் முற்றிலும் பாவத்தால் ஆட்கொள்ளப்பட்டவனாகவும், கறைப்படிந்தவனாகவும் இருக்கிறான் என்பதையும், அவனது பாவ நடத்தையில் எந்த எல்லைக்கும் அவனால் செல்ல முடியும் என்னும் வேதாகமத்தின் மையக் கருத்தையும் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தேவனின் கிருபையையும் இரக்கத்தையும் தவிர மனிதனுக்கு வேறு எவ்வித நம்பிக்கையும் இல்லை.