யாத்திராகமம் 21:7-ஆம் வசனத்தின்படி, ஒருவன் தன் மகளை அடிமைத்தனத்திற்கு விற்க தேவன் அனுமதிக்கிறார் என்பது மட்டுமின்றி, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான சட்டங்களையும் அவர் வழங்குகிறாரே; இது பெண்களுக்கு எதிரான பாகுபாடு அல்லவா? என்ற கேள்வி அநேகருக்கு எழலாம்.
வேதாகமப் பகுதி (யாத்திராகமம் 21:7-11):
"ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போடுவானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை. அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக. இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்."
வசனத்தின் வரலாற்றுப் பின்னணி
இந்த வசனம், “ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போடுவானானால்” என்று தொடங்குவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவன் எந்த மனிதர் மீதும் அடிமைத்தனத்தைத் திணிப்பவரோ அல்லது அதை ஊக்குவிப்பவரோ அல்ல. மாறாக, ஒரு தந்தை தனது வறுமையின் காரணமாகத் தன் மகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். இது அக்காலக் கலாச்சாரத்தில் நிலவிய ஒரு துயரமான சூழ்நிலை. எனவே, தேவன் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தமது அக்கறையை வெளிப்படுத்துகிறார். அதனால்தான், ஒரு “வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது” என்று கூறுகிறார். இதைக் கண்டு பெண்ணியவாதிகள், தேவன் ஆண்களுக்கு ஆதரவாகவும் பெண்களுக்கு எதிராகவும் இருக்கிறார் என்று முறையிடுகிறார்கள். இது தேவனுடைய பாலினப் பாகுபாட்டைக் காட்டுகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக, பெண்களையும் அவர்களது நல்வாழ்வையும் பாதுகாக்க தேவன் வகுத்துள்ள சட்டங்களையே இது காட்டுகிறது.
பெண்களுக்கான சட்டப்பூர்வப் பாதுகாப்பு
மேலும், 8-ஆம் வசனத்திலிருந்து, அடிமையாக விற்கப்பட்ட மகளை எஜமான் ஒரு கட்டத்தில் (பொதுவாக யூத வழக்கப்படி ஒரு வருடம் கழித்து) திருமணம் செய்துகொள்ள வாய்ப்பிருப்பதைப் புரிந்துகொள்கிறோம். இது நிச்சயமாகவே அவளுடைய சமூக நிலையை உயர்த்தும். எனவே, இங்கு விவரிக்கப்பட்டுள்ள காரியம் என்னவெனில், ஓர் இளம் பெண்ணை அவளது தந்தை ஒரு குடும்பத்திற்குத் திருமண நோக்கத்துடனேயே விற்றதாகத் தெரிகிறது. திருமணத்தின் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கருதப்படும்.
-
அந்த எஜமான் அவளுக்குத் துரோகம் செய்தால், அவளை அவன் வேறொருவருக்கு (அந்நியருக்கு) விற்றுவிட முடியாது.
-
எஜமான் இந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்ள முற்படுவதைத் தேவன் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். எனவே, அந்த மனிதன் அவளை வெறுமனே துரத்திவிட முடியாது; அவள் தந்தையால் மீட்கப்படலாம்.
-
ஒருவேளை எஜமான் அவளைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தால், அவர் அந்தப் பெண்ணை ஓர் அடிமையாக அல்ல, தன் சொந்த மகள்களில் ஒருத்தியைப் போலவே நடத்த வேண்டும்.
-
அவன் வேறொரு மனைவியைத் திருமணம் செய்துகொண்டாலும், இவளைக் கைவிட்டுவிடாமல், ஒரு மனைவிக்குச் செய்ய வேண்டிய உணவு, உடை மற்றும் திருமணக் கடமைகளைச் செய்து அவளைப் பராமரிக்க வேண்டும்.
இவை எதுவும் செய்யப்படவில்லையெனில், அவளுடைய தந்தை அவளை எவ்வளவு தொகைக்கு விற்றானோ, அந்தத் தொகையைக் கூடத் திருப்பிச் செலுத்தாமல் அவள் விடுதலையாகச் செல்லலாம். இது அவளை ஓர் அடிமைப் பெண் என்ற நிலையிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கிறது. எனவே, விற்கப்பட்ட பெண்ணானவள் தன் எஜமானரின் வீட்டில், மனைவியாகவோ அல்லது மகளைப் போலவோ கண்ணியமான வாழ்க்கை வாழவே வழியிருக்கிறது. ஒருவேளை எஜமானோ அல்லது அவருடைய மகனோ அவளைத் திருமணம் செய்துகொள்ளத் தவறினாலும், அவள் மீட்கப்படுகிறாள் அல்லது முழுமையாக விடுவிக்கப்படுகிறாள்.
தற்காலச் சமூகத்துடனான ஒப்பீடு
இன்றைய நவீன காலத்திலும், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும்கூட நிலைமை என்ன? அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்குச் சட்டரீதியான நிவாரணங்கள் இருந்தாலும்கூட, எந்தவிதப் பொறுப்பும் இன்றிப் பல ஆண்கள் பெண்களுக்கு வாக்குறுதி அளித்து, நிச்சயதார்த்தம் வரை சென்ற பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விடுகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டும் நமது தற்காலச் சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனையான காரியம் அல்லவா?
பண்டைய கலாச்சாரத்தில், நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நிறுத்தப்பட்ட ஓர் அடிமைப் பெண்ணைத் தேவன் எவ்வளவு கரிசனையோடு பாதுகாத்து வழிநடத்துகிறார் என்பது எவ்வளவு உன்னதமான காரியம்! இதை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்க முடிகிறதா? ஆகவே, பெண்ணியவாதிகள் குற்றம் சாட்டுவதுபோல, வேதாகமக் காலத்தில் அல்லது தோராவில் பெண்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.