படிப்புகள்: 233
Print

கேள்வி: லேவியராகமம் 15:19-30: ஒரு பெண் தன் மாதவிடாய் காலத்தில், அவள் தொடுவதெல்லாம் தீட்டாக இருக்கும் என்றும், அவளைத் தொடுகிறவர்களும் தீட்டாவார்கள் என்றும் இந்த வேதப்பகுதி சொல்கிறது. தேவன் உருவாக்கியதாகக் கூறப்படும் ஒரு உயிரியல் செயல்பாடு (உதிரப்போக்கு), அவளுக்கு ஏற்படும்போது அது தீட்டாக எண்ணப்படுவதும், அதனிமித்தம் அவள் தண்டிக்கப்படுவதும் வேடிக்கையாக உள்ளது. அவர் உருவாக்கிய ஒன்றை அவரே தீட்டு என்று சொல்வது தவறல்லவா?

பதில்: இந்த வேதப்பகுதிகளை நாம் படிக்கும்போது, இந்தக் கட்டளைகள் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டவை என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். யூத பாரம்பரியத்தில் சுத்திகரிப்புச் சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே 'தீட்டு' என்று கூறுவது, பாவத்தையோ அல்லது ஒருவரின் தாழ்வு நிலையையோ குறிப்பதில்லை. பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையல்ல. மாறாக, இது தேவனுடைய மக்களுக்கான பரிசுத்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு ஏற்பாடு என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.

உதிரப்போக்கு நாட்களில் தேவனுடைய மக்கள் அவர் நிமித்தம் தங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, தேசத்தின் நலனுக்காக மீண்டும் நல்ல முறையில் குழந்தைப்பேறு அடையும் திறனுடனும், ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் திரும்பி வருவதற்கான ஒரு ஏற்பாடாகவும் இது அமைந்திருந்தது. தேவன் இஸ்ரவேல் மக்களைத் தம்முடைய தனித்துவமான ஜனமாகத் தெரிந்துகொண்டது மட்டுமன்றி, பிற தேசங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக வாழும்படியும் அழைத்திருந்தார் என்பதை நினைவில் வையுங்கள். மேலும், தேவன் அவர்கள் நடுவில் தம்முடைய வாசஸ்தலமாகிய “ஆசரிப்புக்கூடாரத்தையும்” அமைத்திருந்தார் (லேவியராகமம் 15:31).

அந்தப் பெண்ணியவாதி குறிப்பிடத் தவறிய மற்றொரு முக்கியமான காரியம் என்னவென்றால், இந்தச் சுத்திகரிப்பு முறைமைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருந்தன என்பதே ஆகும். இது பெண்களுக்கு மட்டுமானதல்ல. எனவே, இது எவ்விதப் பாலினப் பாகுபாட்டையும் குறிக்கவில்லை. இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியின்போது மட்டுமன்றி, யாரிடமிருந்தும் எவ்விதமான பிரமியம் அல்லது தீட்டு வெளியேறும்போதும் தனிமைப்படுத்துதலும் சரீர சுத்திகரிப்பும் தேவைப்படுவதாகவே இருந்தது. லேவியராகமம் 15-ஆம் அதிகாரத்தில் நான்கு வகையான தீட்டு வெளியேற்றங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது:

  1. ஆணின் பிரமியம் வெளியேறுதல் (ஒரு வியாதியாகத் தொடர்ந்து வெளியேறுதல்) (வசனங்கள் 1-15)

  2. ஆணின் இந்திரியம் வெளியேறுதல் (வசனங்கள் 16-18)

  3. பெண்ணின் மாதவிடாயினால் உண்டாகும் உதிரப்போக்கு (வசனங்கள் 19-24)

  4. பெண்ணுக்குப் பல நாட்களாகத் தொடர்ந்து ஏற்படும் உதிரப்போக்கு (வசனங்கள் 25-30)

இங்கே சொல்லப்பட்ட காரியங்கள் இருபாலருக்கும் ஏற்படுவதைக் காண்கிறோம். இதில் இரண்டு ஆண்கள் சம்பந்தப்பட்டதாகவும், இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும் உள்ளன. மேலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுத்திகரிப்பின் விதிகள் ஒரே மாதிரியானவையாகவே இருந்தன. எனவே, இந்த வசனங்களின் வாயிலாக தேவன் பாலினப் பாகுபாடு உடையவர் என்று தீர்மானிக்க முடியாது. மாறாக, இது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் தேசம் தனித்துவமாக விளங்கும்படி அவரால் கொடுக்கப்பட்ட உயரிய தரநிலைக் கட்டளைகளாகும்.

இதுபோன்ற உடல் ரீதியான வெளியேற்றங்கள் முடிவடைந்தவுடன் அதற்கான சுத்திகரிப்பு முறைமை சொல்லப்பட்டுள்ளது. அது முடிந்த பிறகு, அவர்கள் பலிகளைச் செலுத்தி, தேவனுக்கென்று தங்களை மறுபிரதிஷ்டை செய்வதற்கான ஓர் ஏற்பாடாக இது இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாயின்போது, ஏழு நாட்கள் தனிமைப்படுத்துவது அவர்களுக்குப் போதுமான ஓய்வையும் புத்துணர்ச்சியையும் பெற வழிவகுக்கிறது. இது நவீன காலப் பெண்களுக்குக் கூட அரிதாகக் கிடைக்கிற ஒன்றாகும்.


கேள்வி: லேவியராகமம் 18:19: பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் அவர்களைப் பார்ப்பது கூட தவறு என்று இந்த வசனம் சொல்கிறதே?

பதில்: லேவியராகமம் 18:19 வசனம் உண்மையிலேயே என்ன சொல்கிறது என்று பார்ப்போம்: “ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.”

முதலாவதாக, இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே, இது ஒரு பெண்ணைத் தவறான வகையில் சித்தரிக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இது மாதவிடாய்க் காலத்தில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதைத் தடைசெய்வதைப் பற்றியதாகும். இங்குள்ள தடை என்பது, பெண்களைப் பார்க்கவே கூடாது என்பதல்ல; மாறாக, மாதவிடாய்க் காலத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அதன் பொருட்டு அவளை நிர்வாணமாக்காமல் இருப்பதுமே ஆகும். நேர்மையாகச் சிந்திப்போமானால், இத்தகைய தடையானது யாருக்குச் சாதகமாக இருக்கிறது, ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா? நிச்சயமாகவே இது பெண்ணுக்கே சாதகமானதாகும்.

ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் பலவீனமாக இருப்பாள். இந்த நேரத்தில் உடலுறவு என்பது அவளுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இதனுடைய வலியைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, இந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட உடலுறவுத் தடை என்பது, பெண்களைக் குறித்த காரியத்தில் தேவனுடைய கனிவான இருதயத்தையே வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது. இதன் மூலம், தேவன் பாலினப் பாகுபாடு காட்டுகிறவர் அல்ல என்பது தெளிவான உண்மையாகும்.