படிப்புகள்: 344
Print

லேவியராகமம் 19:20: ஒரு பெண் அடிமையாயிருந்து, ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும்போது, அவள் வேறொருவனுடன் உடலுறவு கொண்டால், அவள் “கசையினால்” அடிக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது. கசையடி என்பது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா? இத்தகைய நிகழ்வுக்குக் காரணமான அந்தப் பெண் அடிக்கப்பட வேண்டும் என்று இது கூறுகிறது; ஆனால், அவளுடன் இருந்த அந்த ஆணைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே, இது என்ன மாதிரியான சமத்துவம்?

இந்தக் கேள்விக்கும் குற்றச்சாட்டிற்கும் முழுமையான விளக்கம் பெற, இந்தப் பகுதி முழுவதையும் வாசிப்போம்:

லேவியராகமம் 19:20-22: "ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்."

இந்த 20-ஆம் வசனம் மூலமொழிக்கு (எபிரெயம்) நேராக மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையில், அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைக்கு ‘அடிக்கப்படுதல்’ என்பது பொருள் கிடையாது. இந்த வார்த்தை முழு பழைய ஏற்பாட்டிலும் ஒரேயொரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே “பகார்” (Baqar) என்ற வினைச்சொல் தோன்றியது. “விசாரணை செய், தீர விசாரி, தீவிரமாய் தேடு” என்பதே இதன் பொருளாகும். எனவே, ‘அடிக்கப்படுதல்’ என்பதற்குப் பதிலாக, அவளுடைய “விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வசனத்தில் வருகிற, “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்ற வாசகத்தில் இடம்பெறும் “மீட்கப்படாமலும்” என்னும் தமிழ் வார்த்தைக்கான எபிரெயச் சொல், “படா” (Padah) என்பதாகும். இதற்கு ‘மீட்பு’ என்ற பொருள் இருந்தாலும், பெரும்பாலும் “காப்பாற்றப்படுதல், விடுவிக்கப்படுதல்” என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே, “முற்றிலும் மீட்கப்படாமலும்” என்பதற்குப் பதிலாக, “முற்றிலும் காப்பாற்றப்படாமலும்” என்று வர வேண்டும். அதாவது, அந்த அடிமைப் பெண் தவறான முறையில் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்படும்போது, ஒருவராலும் காப்பாற்றப்படாமல் கைவிடப்பட்டால், அவளுடைய வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். எனவே, லேவியராகமம் 19:20-க்கான மாற்று எளிய மொழிபெயர்ப்பு இவ்வாறாக இருக்க வேண்டும்:

“ஓர் அடிமையாகிய பெண்ணுடன் ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணும்போது, அப்பெண்ணுடன் தவறாக நடந்துகொண்ட நபரால் அவள் நிந்திக்கப்பட்டும், அவளைக் காப்பாற்ற எவரும் உதவி செய்யாமலும், அவளுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்திரம் வழங்கப்படாமலும் இருந்தால், அவளுடைய வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்; அவள் அடிமை ஸ்தானத்திலிருந்து விடுதலை பெறாதவளாகையால் அவன் கொல்லப்படமாட்டான்.”

ஆகவே, இங்கு வழங்கப்பட்ட கட்டளையில் அந்தப் பெண்ணைத் தண்டிப்பதற்கான எந்தவித அறிவுரையும் இல்லை. அவளே இங்கு பாதிக்கப்பட்டவள். இந்த வசனத்தின் தொடக்கத்தில், ஒரு ஆண் ஓர் அடிமைப் பெண்ணைக் கற்பழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, அவள் விடுதலையாகாதவள் ஆகையால் அவன் (குற்றவாளி) கொல்லப்படமாட்டான் என்பதே முடிவு. அவள் விடுதலை பெற்ற ஒரு சுதந்திரப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் மரண தண்டனை அடைய வேண்டியிருந்திருக்கும்!

இந்த வழக்கில், அவளைக் கற்பழித்தவன் தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, அதற்கான குற்றநிவாரண பலியைச் செலுத்த வேண்டும் (வசனம் 21). ஆகவே, அவளைக் கற்பழித்த ஆணுக்குத் தண்டனை இல்லை என்று ஆகிவிடாது. அவனும் தன் குற்றத்தைச் சுமக்க வேண்டும்; அதற்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அவள் குற்றமற்றவளாக விடுவிக்கப்படுவது போல், இவன் விடுவிக்கப்படுவதில்லை.
இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், இந்தப் பிரச்சினையில், அடிமைப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆண் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அந்த அடிமைப் பெண் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில், இவள் ஓர் அடிமையாக இருப்பதால், ஒரு சுதந்திரமான மனிதனை எதிர்ப்பதில் உள்ள தன்னுடைய இயலாமையை அவள் உணர்ந்திருக்கலாம்.

எனவே, பாவத்திற்குப் பரிகாரம் செய்யும் பொறுப்பு, பெண்ணிடம் கேட்கப்படாமல் ஆணின் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஓர் அடிமைப் பெண்ணின் மீது தேவன் கொண்டிருக்கிற கரிசனையுள்ள இதயத்தைப் பாருங்கள்! அந்தக் காலத்தில் நிலவிய அடிமைத்தனத்தில், இப்படியான ஒன்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும்.