லேவியராகமம் 21:9-ஆம் வசனம், ஆசாரியனின் மகள் வேசித்தனஞ்செய்து தன்னைத் தீட்டுப்படுத்தினால் அவள் தீயினால் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், ஒழுக்கக்கேடாய் நடக்கிற ஆசாரியர்களின் மகன்களைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லையே? இது குறித்து தோராவில் எங்கும் பதிலளிக்கப்படவில்லை. இங்கே ஆண்களுக்கு அவர்கள் விரும்பியபடி செய்ய அதிகாரம் உள்ளது போலவும், ஆனால் ஒரு பெண் தவறு செய்துவிட்டால், அவள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது போலவும் தோன்றுகிறதே; இது பாரபட்சம் அல்லவா? என்ற கேள்வி எழலாம்.
லேவியராகமம் 21 மற்றும் 22-ஆம் அதிகாரங்கள், ஆசாரியனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் இருக்க வேண்டிய பரிசுத்த ஸ்தானத்திற்கான நியமங்களாகும். பரிசுத்த வேதாகமத்தின் தேவன், தம்முடைய ஆசாரியர்களிடத்திலும் குறிப்பாக இஸ்ரவேல் மக்களிடமும் எதிர்பார்க்கிற பரிசுத்தத்தின் தரநிலையை இது காட்டுகிறது. மேலும், தேவன் பரிசுத்தத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
ஆரோனின் குமாரர்கள் பரிசுத்தராக இருக்க வேண்டும் என்ற நியமத்திற்கான கட்டளைகளை லேவியராகமம் 21-ஆம் அதிகாரம் விவரிக்கிறது. 1 முதல் 8 வரையிலான வசனங்களில் ஆசாரியர்களின் மகன்கள் எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதற்கான அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 9-ஆம் வசனம், ஆசாரியனின் மகள் நடந்துகொள்ள வேண்டிய முறைமையைப் பற்றி விவரிக்கிறது.
ஆசாரியனின் மகள் வேசித்தனஞ்செய்தால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்; அதுவும் அவள் தீயினால் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். இது பாவங்களுக்கான தண்டனைகளில் மிகவும் கடுமையான ஒன்றாகும். இத்தகைய கொடிய தண்டனை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் கட்டளையை மீறுவதைத் தடுப்பதே ஆகும். அந்தத் தண்டனையின் கடுமைக்குப் பயந்து அவர்கள் பாவம் செய்யாமல் விலகியிருப்பார்கள் என்பதே இதன் நோக்கமாகும். மேலும், இப்பகுதியில் ஆசாரியனின் மகன்களைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மைதான். அதற்காக, அவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துவிடுவார்கள் என்று கூறுவது வேதாகமத்தின் தேவனைப் பற்றிய அறியாமையாகும்.
பாலியல் மீறுதல்களைப் பற்றி வேதாகமம் விவாதிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், தேவன் ஆண், பெண் இருபாலருக்குமே தண்டனையை அறிவித்திருக்கிறார். எந்தவொரு சாதாரண இஸ்ரவேலனுக்கும் இச்சட்டங்கள் பொருந்துமெனில், பலிகளுடன் தேவனிடம் நெருங்கி வரும் ஆசாரியர்களாகிய ஆரோனின் மகன்களுக்கு இது எவ்வளவு அதிகமாகப் பொருந்தும்! தேவனுக்கு அருகாமையில் இருப்பவர்களை அவர் தண்டிக்க மாட்டார் என்று சிந்திப்பது முட்டாள்தனமானது. இந்தக் குறிப்பிட்ட பகுதியில் ஆண்களின் தண்டனையைப் பற்றிக் குறிப்பிடாததால், அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் அர்த்தமாகாது.
நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, எந்தவொரு ஆசாரியனின் மகளும் எரிக்கப்பட்டதாக வேதாகமத்தில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், கீழ்ப்படியாத ஆசாரியனின் மகன்களுக்கு என்ன நேரிட்டது என்பதற்கான இரண்டு பதிவுகள் வேதாகமத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. லேவியராகமம் 10-ஆம் அதிகாரத்தில், ஆரோனின் மூத்த மகன்களான நாதாபும் அபியூவும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்ததற்காகத் தேவனால் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். பிரதான ஆசாரியனாகிய ஏலியின் மகன்களான ஓப்னியும் பினெகாசும் (1 சாமுவேல் 4) தங்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்காகப் போரில் கொல்லப்பட்டதையும் தேவனின் தண்டனையாகவே நாம் காண்கிறோம்.
பாவம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக மிகவும் அருவருப்பானதும் கடுமையானதுமான ஒரு காரியமாயிருக்கிறது. தேவன் பரிசுத்தரும் நீதியுள்ளவருமாயிருக்கிறார். பாலினம், தேசியம், சமூக அந்தஸ்து மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பாவம் செய்கிற எவரையும் தேவன் தண்டிப்பார். ஆணோ பெண்ணோ, யார் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தேவன் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிட மாட்டார்; அவர்களை நிச்சயமாகவே தண்டிப்பார். இந்தச் சத்தியம் வேதாகமம் முழுவதிலும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த அதிகாரத்தில் (லேவியராகமம் 22) சொல்லப்பட்டுள்ளதையும் நாம் கூடுதலாகக் கவனித்துப் பார்ப்போம். பலி செலுத்தப்பட்ட பரிசுத்தமான உணவுகளை, ஆசாரியனின் பிள்ளைகள் என்ற முறையில் அவருடைய மகன்களும் மகள்களும் உண்பதற்கு தேவன் சமமாகவே அனுமதித்திருக்கிறார். எனவே, தேவன் பெண் பிள்ளைகளுடைய காரியத்தில் எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை என்பது உறுதியாகிறது. வேதத்தில் நாம் ஆராய்ந்து பார்த்தாலும், தேவன் அவ்வாறு பாரபட்சம் காட்டியதாக எங்கும் பார்க்க முடியாது.