உண்மை கிறிஸ்தவனாக இருப்பதன் விலை என்ன?
படிப்புகள்: 284
Print
ஆசிரியர்: J.C. ரைல்
தமிழாக்கம்: மேஷாக்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

என்னுடைய விளக்கத்தில் எந்தத் தவறும் இல்லாமல் இருக்கட்டும். ஒரு கிறிஸ்தவனின் ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி நான் இங்கு ஆராயவில்லை. மனிதனை நரகத்திலிருந்து மீட்பதற்கான பிராயச்சித்தத்தை வழங்கி, அவனை மீட்பதற்கு தேவகுமாரனின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் ஈடாகாது என்பதை நான் நன்கு அறிவேன். நம்முடைய பாவ மீட்பிற்காகச் செலுத்தப்பட்ட விலை, கல்வாரியில் இயேசு கிறிஸ்து மரித்ததைக் காட்டிலும் எள்ளளவும் குறைவானதல்ல. நாம் "விலைக்குக் கொள்ளப்பட்டவர்கள்" (1 கொரிந்தியர் 6:20). "எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தவர் இயேசு கிறிஸ்து" (1 தீமோத்தேயு 2:6). இவை அனைத்தும் நம்முடைய கேள்விக்கு அப்பாற்பட்டவை.

நான் கருத்தில் கொள்ள விரும்பும் காரியம் முற்றிலும் வேறுபட்டது. ஒரு மனிதன் இரட்சிக்கப்பட விரும்பினால் அவன் எதைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே அது. கிறிஸ்துவைச் சேவிக்க விரும்பும் ஒரு மனிதன், தன்னை எவ்வளவாய் தியாகம் செய்ய வேண்டும்? இந்த அர்த்தத்தில்தான், "அதற்கு என்ன செலவாகும்?" என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். இது மிக முக்கியமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒருவன் பெயரளவில் கிறிஸ்தவனாக இருப்பதற்கு மிகக் குறைந்த விலையே போதுமானது என்பதை நான் எளிதாக ஒப்புக்கொள்கிறேன். ஒரு மனிதன் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறை ஆலயத்திற்குச் சென்று, வாரம் முழுவதும் ஒழுக்கமாக வாழ்ந்தால், தன்னைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோர் தங்கள் மதத்தைப் பின்பற்றுவது போலவே அவரும் பின்பற்றி வருகிறார் எனலாம். இவை அனைத்தும் மலிவானவையும், எளிதானவையுமான காரியங்கள்; இதில் சுய வெறுப்போ, சுய தியாகமோ இல்லை. இதுவே இரட்சிக்கிற கிறிஸ்தவமாகவும், நாம் மரிக்கும்போது நம்மைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் இருந்தால், வாழ்க்கை முறையின் விளக்கத்தை நாம் மாற்றி, ”பரலோகத்திற்குப் போகும் வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது!" என்று எழுத வேண்டியதிருக்கும்.

ஆனால், வேதாகமத்தின் தரத்தின்படி ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதற்கு ஏதோ ஒன்றை விலையாகக் கொடுக்க வேண்டியதிருக்கிறது. வெற்றிக்கொள்ள வேண்டிய எதிரிகள், போராட வேண்டிய யுத்தங்கள், செய்யப்பட வேண்டிய தியாகங்கள், கைவிடப்பட வேண்டிய எகிப்து, கடந்து செல்ல வேண்டிய வனாந்தரம், சுமக்க வேண்டிய சிலுவை மற்றும் ஓட வேண்டிய பந்தயம் ஆகியவை கிறிஸ்தவ வாழ்வில் உள்ளன. மனந்திரும்புதல் என்பது ஒரு மனிதனை நாற்காலியில் அமரவைத்து, அவனை எளிதாகப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வது அல்ல. மாறாக, இது ஒரு வலிமையான போரின் துவக்கம். அதில் வெற்றி பெறுவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, "செலவை எண்ணுவது" என்பதன் சொல்ல முடியாத முக்கியத்துவம் இங்குதான் எழுகிறது.

ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதற்கு என்ன செலவாகும் என்பதைத் துல்லியமாகவும், குறிப்பாகவும் காட்ட முயற்சிக்கிறேன். ஒரு மனிதன் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறான் என்றும், கிறிஸ்துவைப் பின்பற்றும்படி ஈர்க்கப்பட்டிருக்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம். ஏதோ ஒரு துன்பமோ, திடீர் மரணமோ அல்லது ஒரு எழுப்புதல் பிரசங்கமோ அவனது மனசாட்சியைத் தூண்டி, அவனது ஆத்துமாவின் மதிப்பையும், உண்மையான கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் உணர வைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். சந்தேகத்திற்கு இடமின்றி, அவனை ஊக்கப்படுத்த எல்லாம் இருக்கிறது. அவனுடைய பாவங்கள் எவ்வளவு அதிகமாகவும், கொடியதாகவும் இருந்தாலும், அவை முற்றிலுமாக மன்னிக்கப்படலாம். அவன் இதயம் எவ்வளவு குளிர்ந்துபோய் கடினப்பட்டிருந்தாலும், அது முற்றிலுமாக மாற்றப்படலாம். கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும், இரக்கமும், கிருபையும் அவனுக்காகத் தயாராக உள்ளன. ஆனாலும், அவன் செலுத்த வேண்டிய விலையைக் கணக்கிட வேண்டும். அவனுடைய பக்தி அவனுக்கு என்ன செலவைக் கொடுக்கப் போகிறது என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. சுயநீதி என்னும் விலை: மெய்யான கிறிஸ்தவத்திற்கு ஒருவன் தன் சுயநீதியை விலையாகக் கொடுக்க வேண்டும். அவன் எல்லாப் பெருமைகளையும், மேலான எண்ணங்களையும், தனது சொந்த நன்மையின் மீதான நம்பிக்கையையும் தூக்கி எறிய வேண்டும். இலவசக் கிருபையினாலும், மற்றொருவரின் (கிறிஸ்துவின்) தகுதி மற்றும் நீதியினாலும் மட்டுமே இரட்சிக்கப்பட்ட ஒரு எளிய பாவியாகப் பரலோகத்திற்குச் செல்வதில் அவன் திருப்தி அடைய வேண்டும். "காணாமல் போன ஆட்டைப்போல நான் வழிதப்பிப் போனேன்" என்றும், "செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டேன்; எனக்குள் எந்த நன்மையும் இல்லை" என்றும் ஜெபப் புத்தகத்தின் வார்த்தைகளை அவன் உண்மையிலேயே உணர்ந்து சொல்ல வேண்டும். தனது சொந்த ஒழுக்கம், கனம், ஜெபம், வேத வாசிப்பு, ஆலய ஆராதனை மற்றும் சடங்குகளில் பங்குபெறுதல் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எதிலும் நம்பிக்கை வைக்காதிருக்க அவன் மனமுவந்தவனாக இருக்க வேண்டும்.

2. பாவங்களை வெறுத்தல் என்னும் விலை: மெய்யான கிறிஸ்தவத்திற்கு ஒரு மனிதன் தன் பாவங்களை விலையாகக் கொடுக்க வேண்டும். தேவனுடைய பார்வையில் தவறாக இருக்கும் ஒவ்வொரு பழக்கத்தையும், நடைமுறையையும் அவன் கைவிட முன்வர வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள உலகம் என்ன சொன்னாலும், நினைத்தாலும், அதற்கு எதிராகத் தனது முகத்தைத் திருப்ப வேண்டும். பாவத்துடன் சண்டையிடவும், அதிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளவும், அதனுடன் போராடவும், அதைச் சிலுவையில் அறையவும், அதைக் கட்டுப்படுத்தவும் அவன் பிரயாசப்பட வேண்டும். இதை அவன் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்ய வேண்டும். அவன் விரும்பும் எந்தவொரு குறிப்பிட்ட பாவத்துடனும் சமாதான உடன்படிக்கை இருக்கக்கூடாது. அவன் எல்லாப் பாவங்களையும் தனது கொடிய எதிரிகளாகக் கருதி, ஒவ்வொரு பொய்யான வழியையும் வெறுக்க வேண்டும். சிறியதோ பெரியதோ, வெளியரங்கமானதோ அந்தரங்கமானதோ, அவனுடைய அனைத்து பாவங்களும் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும். அவை ஒவ்வொரு நாளும் அவனுடன் கடுமையாகப் போராடலாம்; சில சமயங்களில் அவை அவனை மேற்கொள்ளவும் கூடும். ஆனால், அவன் ஒருபோதும் அவற்றிற்கு அடிபணியக்கூடாது. அவன் தனது பாவங்களுடன் ஒரு நிரந்தரப் போரைத் தொடர வேண்டும். "நீங்கள் செய்த எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கிவிடுங்கள்;" "உமது பாவங்களையும், அக்கிரமங்களையும் அகற்றிவிடும்;" "தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்” என்று எழுதப்பட்டுள்ளது (எசேக்கியேல் 18:31; தானியேல் 4:27; ஏசாயா 1:16).

இது கடினமாகத் தோன்றலாம். எனக்கு அதில் ஆச்சரியமில்லை. நம் பாவங்கள் பெரும்பாலும் நம் பிள்ளைகளைப் போலவே நமக்கு மிகவும் பிரியமானவை; நாம் அவற்றை நேசிக்கிறோம், அவற்றைக் கட்டிப்பிடிக்கிறோம், அவற்றைப் பற்றிக்கொள்கிறோம், அவற்றில் மகிழ்ச்சியடைகிறோம். அவற்றைப் பிரிவது வலது கையைத் தறிப்பது அல்லது வலது கண்ணைப் பிடுங்குவது போன்றது. ஆனால் அது செய்யப்பட்டே ஆக வேண்டும். அந்தப் பிரிவு வந்தே ஆக வேண்டும். "பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்," அவன் இரட்சிக்கப்பட விரும்பினால், அது விடப்பட வேண்டும் (யோபு 20:12, 13). அவனும் தேவனும் நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், அவனும் பாவமும் பகைவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்து எந்தப் பாவியையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்; ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களில் ஒட்டிக்கொண்டிருந்தால், அவர் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

3. சரீர சுகம் மற்றும் நிர்விசாரத்தை இழத்தல்: மேலும், கிறிஸ்தவத்திற்கு ஒரு மனிதன் தன் நிர்விசாரத்தின் (சுகபோக வாழ்க்கை) மீதான அன்பை விலையாகக் கொடுக்க வேண்டும். பரலோகத்தை நோக்கி வெற்றிகரமான ஓட்டத்தை ஓட விரும்பினால், அவன் பாடுகளையும் சிரமங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிரியின் எல்லையில் உள்ள ஒரு போர்வீரனைப் போல, அவன் தினமும் விழிப்புடன் இருந்து, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு இடத்திலும்—பொதுவிலும் தனிமையிலும், அந்நியர்களிடையேயும் வீட்டிலும்—அவன் தனது நடத்தையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவன் தனது நேரம், தனது நாக்கு, தனது கோபம், தனது எண்ணங்கள், தனது கற்பனை, தனது நோக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு உறவிலும் கவனமாக இருக்க வேண்டும். அவன் தனது ஜெபங்கள், வேத வாசிப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில், அவற்றின் அனைத்துக் கிருபையின் சாதனங்களுடனும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். இந்தக் காரியங்களில் ஈடுபடுவதால், அவன் பரிபூரணத்திலிருந்து வெகு தொலைவிலேயே இருப்பான்; ஆனால் இவற்றைப் பாதுகாப்பாகப் புறக்கணிக்கக்கூடியவர்கள் என்று யாரும் இல்லை. "சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்" (நீதிமொழிகள் 13:4).

இதுவும் கடினமாகத் தெரிகிறது. நமது பக்தி முயற்சியைப் பற்றிய "சிரமத்தை” போல, நாம் இயல்பாகவே வெறுக்கும் எதுவும் இல்லை. நாம் பிரச்சனையை வெறுக்கிறோம். நாம் மற்றொரு கிறிஸ்தவத்தைக் கொண்டிருக்கவும், மற்றொருவரின் மூலம் நல்லவராக இருக்கவும், நமக்காக எல்லாம் செய்யப்படவும் வேண்டும் என்று நாம் இரகசியமாக விரும்புகிறோம். உழைப்பு தேவைப்படும் எதுவும் நம் மாம்சத்திற்கு முற்றிலும் எதிரானது. ஆனால் ஆன்மா "வேதனைகள் இல்லாமல் எந்த ஆதாயத்தையும்" பெற முடியாது.

4. உலகத்தின் தயவை இழத்தல்: இறுதியாக, மெய்யான கிறிஸ்தவத்திற்கு ஒரு மனிதன் உலகத்தின் தயவை விலையாகக் கொடுக்க வேண்டும். அவன் தேவனைப் பிரியப்படுத்துவதால், மனிதர்கள் தன்னைப் பற்றி மோசமாக நினைப்பதை அவன் ஏற்க வேண்டும். கேலி செய்யப்படுவதை, அவதூறு பேசப்படுவதை, துன்புறுத்தப்படுவதை மற்றும் வெறுக்கப்படுவதை அவன் விசித்திரமான காரியமாகக் கருதக்கூடாது. மார்க்கத்தில் அவனுடைய கருத்துகளும் நடைமுறைகளும் வெறுக்கப்பட்டு, அவமதிக்கப்படுவதைக் கண்டு அவன் ஆச்சரியப்படக்கூடாது. பலரால் அவன் ஒரு முட்டாளாக, உணர்ச்சிவசப்படுபவனாக மற்றும் ஒரு மதவெறியனாக எண்ணப்படவும், தனது வார்த்தைகள் திரிபுபடுத்தப்படவும், தனது செயல்கள் தவறாகச் சித்தரிக்கப்படவும் அவன் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும். உண்மையில், சிலர் அவனைப் பைத்தியம் என்று அழைத்தாலும் அவன் ஆச்சரியப்படக்கூடாது. எம் எஜமான் பின்வருமாறு கூறுகிறார்: "ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால் உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்" (யோவான் 15:20).

இதுவும் கடினமானது என்று நான் தைரியமாகக் கூறுகிறேன். அநீதியான நடத்துதலையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும் நாம் இயல்பாகவே விரும்புவதில்லை; காரணமின்றி குற்றம் சாட்டப்படுவதை மிகவும் கடினமானதாக நினைக்கிறோம். நம் அயலாரின் நன்மதிப்பைப் பெற நாம் விரும்பாவிட்டால், நாம் சதை மற்றும் இரத்தமாக (மனிதர்களாக) இருக்க முடியாது. எதிராகப் பேசப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், பொய் சொல்லப்படுவதும், தனித்து நிற்பதும் எப்போதும் விரும்பத்தகாதவையே. ஆனால் அதற்கு வேறு வழியில்லை. நம் எஜமான் குடித்த பாத்திரத்தை அவருடைய சீடர்களும் குடிக்க வேண்டும். அவர்கள் "மனுஷரால் அசட்டை பண்ணப்பட்டு புறக்கணிக்கப்பட வேண்டும்" (ஏசாயா 53:3). இதை நம் கணக்கில் கடைசியாக வைப்போம். ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு, ஒரு மனிதன் உலகத்தின் தயவை இழக்க நேரிடும்.

இந்தப் பெரிய விலையின் எடையைக் கருத்தில் கொண்டும், நாம் நமது சுயநீதியையும், நமது பாவங்களையும், நமது சோம்பேறித்தனத்தையும், உலகத்தின் மீதான நமது அன்பையும் வைத்துக்கொண்டே இரட்சிக்கப்படலாம் என்று சொல்லத் துணியும் மனிதன், உண்மையில் தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும்!

ஆம், ஒரு உண்மையான கிறிஸ்தவராக இருப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆன்மாவைக் காப்பாற்றுவது இலாபமானதா என்று, எந்த விவேகமுள்ள ஆணோ பெண்ணோ சந்தேகிக்க முடியுமா? கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருக்கும்போது, கப்பல் பணியாளர்கள் விலைமதிப்பற்ற சரக்குகளைக் கடலில் வீசுவதைப் பற்றிச் யோசிக்கவே மாட்டார்கள். ஒரு கை அல்லது கால் சேதமடைந்தால், உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு மனிதன் எத்தகைய கடுமையான அறுவை சிகிச்சைக்கும், ஏன் உறுப்பைத் துண்டிப்பதற்குக்கூட உடன்படுவான். நிச்சயமாக ஒரு கிறிஸ்தவன் தனக்கும் பரலோகத்திற்கும் இடையில் நிற்கும் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். எதையும் விலையாகக் கொடுக்காத ஒரு மார்க்கம், எதற்கும் உதவாதது! சிலுவை இல்லாத ஒரு மலிவான கிறிஸ்தவம், இறுதியில் கிரீடம் இல்லாத ஒரு பயனற்ற கிறிஸ்தவமாகவே முடியும்.