கனி தருகிறவர்கள்
படிப்புகள்: 118
Print
ஆசிரியர்: அம்ரேஷ் செமுராத்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16)

தெரிந்து கொள்வது என்கிற பதத்திற்குப் பொருள் ஒருவர் தனக்காக ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொள்வதைக் குறிக்கிறது. கிறிஸ்து தனக்காகத் தெரிந்து கொண்டார். இங்கே வரும் வலியுறுத்தலைக் கவனியுங்கள்: “நான் உங்களைத் தெரிந்து கொண்டேன். நான் உங்களை ஏற்படுத்தினேன்”. இங்கே வரும் மறுப்பையும் கவனியுங்கள்: நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை, நான் தெரிந்து கொண்டேன். முதல் குறிப்பு இதுதான்: கிறிஸ்துவின் தெரிந்தெடுப்பு நாம் அவரைத் தெரிவு செய்கிறதற்கும் முந்தி வருகிற ஒன்று. இயேசுவுடன் உங்களுக்கு இருக்கும் உறவு நீங்கள் அவரைத் தெரிந்து கொண்டதின் அடிப்படையில் வரவில்லை, ஆனால் அவர் தமது கிருபையால் உங்களைத் தெரிந்தெடுத்ததன் அடிப்படையில் வருகிறது.

இரண்டாவதாக, கிறிஸ்து நம்மை எதற்காகத் தெரிந்து கொண்டார்? தேவன் உங்களைத் தெரிந்து கொண்டு உங்களை நியமித்தது (பிரித்தெடுத்தது) குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும்படியாக, அதாவது நீங்கள் போய், கனி கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகர் மனதில் எழும்பும் மிகப்பெரிய கேள்வி இதுதான்: இந்தக் கனி என்பது என்ன? சிலர் கலாத்தியர் 5:22-23-ல் சொல்லப்பட்டுள்ள ஆவிக்குரிய கனியைக் குறிக்கிறது என்கிறார்கள். இந்த வாதத்திற்குக் காரணம் இந்த ஆவியின் கனி ஒருமையில் சொல்லப்பட்டிருப்பது தான்.

கனிக்கான அர்த்தத்தை யோவான் 15-ம் அதிகாரத்தின் சூழலில் இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். யோவான் 15 வது அதிகாரத்தின் முக்கியமான சூழல் சுவிசேஷம் அறிவித்தலும் அருட்பணியின் சேவையும் தான் என அநேக அறிஞர்கள் கருதுகிறார்கள். நாம் புறப்பட்டுப் போக வேண்டும் என்பதற்காக கிறிஸ்து நம்மைத் தெரிந்தெடுத்தார் (மத்தேயு 28:19, யோவான் 20:21). லெஸ்லி நியூபிகின் எழுதியுள்ளார், “தேவன் தம் மக்களிடம் வாசம்பண்ணுவதன் நோக்கம் நாம் ஒரு இடத்தில் நீங்கள் தங்கி முழு உலகத்தையும் மறந்து விட அல்ல, இது நீங்கள் அருட்பணி செய்ய அவரால் விடுக்கப்படும் அழைப்பாணை”. “தேவன் நம்மைத் தெரிந்தெடுத்ததன் நோக்கம் நமது இரட்சிப்பிற்காக மட்டுமல்ல, அருட்பணிக்கும் தான்” என்று எழுதினார் கிராண்ட் ஆஸ்பார்ன். அவர் ஊழியத்தை மகிமையான வேலை என்று வர்ணிக்கிறார். நாம் கொடுக்க வேண்டிய கனி கிறிஸ்துவுக்காக புதியவர்களைக் கொண்டு வருவதாகும். இந்தக் கனியை அறுவடை செய்யும்படியாக, முதலில் பாவிகளுக்கு சுவிசேஷத்தை அறிவித்து, பரிசுத்த ஆவியானவர் அவர்களை இரட்சிக்கும்படியாய் ஜெபிக்க வேண்டும். சுவிசேஷம் அறிவித்தலும், ஊழிய அருட்பணியும் புதிய ஏற்பாடின் மையமாகத் திகழ்கிறது.

“கிறிஸ்துவுடன் உங்களுக்கு உள்ள உறவு நீங்கள் அவரைத் தெரிந்து கொண்டதால் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக அவருடைய கிருபையால் உங்களைத் தெரிந்தெடுத்ததில் தான் இருக்கிறது”.

இப்போது ஜெபத்திற்கான வாக்கினைக் கவனியுங்கள்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக”. பலரும் இந்த வசனத்தை அதன் சூழலைவிட்டு எடுத்து, இந்த வாக்கினை வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வாக்குத்தத்தமோ சுவிசேஷம் அல்லது அருட்பணி வழியாக கனிதரும்படியாக நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம் என்கிற காரணத்திற்காகவே தரப்பட்டது. புரூஸ் மில்னே இவ்வாறு எழுதுகிறார், “தேவனுடைய மக்களின் பயனுள்ள ஊழியத்திற்கு ஜெபம் இன்றியமையாத ஒன்று. ஆனால் வருத்தத்திற்குரிய காரியம் என்னவென்றால், அநேகம் சபைகளின் நிலையை யாக்கோபு 4:2 தெளிவாக வெளிப்படுத்துகிறது, ‘நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை’. மேலும் கிராண்ட் ஆஸ்பார்ன் இவ்வாறு நினைக்கிறார், “உலகத்திற்கான அருட்பணி என்பது மிகவும் கடினமானதும், ஆபத்து நிறைந்ததுமான வேலையாகவும், உலகம் அதைப் பகைக்கவும் எதிர்க்கவும் செய்வதால், அருட்பணி முயற்சிகளை ஜெபத்தால் கழுவி, ஆவியானவரின் பலப்படுத்தும் பிரசன்னத்தை பெற்றுக்கெண்டு நாம் புறப்பட்டுப் போக வேண்டும்”.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படியாக, நீங்கள் சுவிசேஷம் சொல்லுகிற பணியில் உங்களை முழுமையான வாஞ்சையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறீர்களா? அறுவடையின் எஜமானர் உங்களுடைய பிரயாசத்தின் பலனை அறுவடை செய்யவும், அந்தப் பலன் நிலைத்திருக்கவும் வேண்டும் என்கிற தாகமுடன், உங்கள் நற்செய்திப் பணியினை ஜெபத்தால் நினைக்கிறீர்களா?  நற்செய்தி அறிவிப்பும், ஜெபமும் இணைந்தே பயணிக்கின்றன. தேவன் இணைத்ததை நாம் பிரிக்கக்கூடாது.