படிப்புகள்: 9
Print
ஆசிரியர்: ஆர்தர் W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3:30 நிமிடங்கள்

 

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. எபிரெயர் 12:14

"ஒரு விசுவாசியின் இறுதியான மகிமைப்படுத்தலுக்கு தனிப்பட்ட பரிசுத்தம் தேவையில்லை என்ற கருத்து, வேதாகமத்தின் ஒவ்வொரு நியாயமான கட்டளைகளுக்கும், ஒவ்வொரு கருத்துக்களுக்கும் நேரடியாக எதிரானது." — அகஸ்டஸ் டோப்லாடி

மனிதகுலம் ஆதாமின் வீழ்ச்சியின் மூலம், நாம் தேவனின் அன்பை மட்டுமல்ல, நமது இயல்பின் தூய்மையையும் இழந்தோம். எனவே, நாம் தேவனுடன் சமாதானம் பெறுவதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளார்ந்த மனிதனும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில், தனிப்பட்ட பரிசுத்தம் இல்லாமல், "ஒருவரும் கர்த்தரைக் தரிசிக்க முடியாது" (எபிரெயர் 12:14). "உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." (1 பேதுரு 1:15-16). நாம் பரிசுத்தமடையவிட்டால் தேவனின் தன்மையோடு இணைய முடியாது. அவருக்கும் நமக்கும் இடையே எந்தவொரு உறவும் இருக்க முடியாது.

ஆனால், ஒரே நேரத்தில் ஒருவர் பாவமுள்ளவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்க முடியுமா? உண்மையான கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் அதிகமான மாம்ச இச்சையும் அசுத்தமும் தீமையும் இருப்பதைக் கண்டு, தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கருதுகிறார்கள். நீதிமானாக்கப்படுதல் என்ற சத்தியம் நாம் நம்மில் பரிசுத்தம் இல்லாதவர்களாக இருந்தாலும், கிறிஸ்துவின் பரிசுத்தத்தினால் நாம் நீதிமானக்கப்படுகிறோம் என்கிறது. இருந்தாலும் இந்த பிரச்சனை தீர்க்கப்படவில்லை. ஏனெனில் வேதம் தெளிவாக சொல்கிறது, தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் பரிசுத்தமாய் வாழ்வார்கள், அவர்களுக்குள் இருக்கும் பாவ இயல்பு நீக்கப்படவில்லை என்றாலும் பரிசுத்தமாய் வாழ்வார்கள். (விசுவாசி பாவத்தோடு தொடர்ந்து போராடுவான்)

"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8). நமது ஆவியின் மறுபிறப்பானது நமது எண்ணைகளையும், ஆசைகளையும், சித்தத்தையும் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கியதாக மாற்ற வேண்டும். வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலும் இணக்கமானதாகவும், பாவத்திலிருந்து விலகியும் இருக்க வேண்டும். இந்த செயல் விசுவாசத்திலிருந்தும் அன்பிலிருந்தும் வருகிறது. நமது எல்லா செயல்களும் கர்த்தரின் மகிமைக்காக இயேசு கிறிஸ்துவின் மூலமாக நற்செய்தியின் அடிப்படையில் அமைந்ததாய் இருக்கவேண்டும். விசுவாசியின் இருதயத்தில் செயல்படும் பரிசுத்த ஆவியானவர் அவர்களின் வெளிப்புற செயல்களை பரிசுத்தப்படுத்தி பாவ இருள் இல்லாத பிதாவிடம் அவர்களுடைய செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்க செய்கிறார்.

ஒரு விசுவாசிக்கு முழுமையான பூரணப் பரிசுத்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் இருப்பது உண்மைதான். அதேநேரம் அவரிடமிருந்து பெறப்பட்ட பரிசுத்த இயல்பும் இருக்க வேண்டும். சிலர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முழுமையான கீழ்ப்படிதலை குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் தங்களின் தனிப்பட்ட பரிசுத்தத்தை பற்றிய கவலையோ அக்கறையோ இல்லாமல் இருக்கிறார்கள். "இரட்சிப்பின் வஸ்திரங்களை அணிந்துகொண்டு நீதியின் வஸ்திரத்தால் மூடப்பட்டிருப்பதைப்" பற்றி அவர்கள் அதிகம் பேசுகிறார்கள், (ஏசாயா 61:10) ஆனால் தாங்கள் "தாழ்மையின் வஸ்திரத்தால்"(1 பேதுரு 5:5) அலங்கரிக்கப்பட்டிருப்பதற்கோ," உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (கொலோசெயர் 3:12,13) போன்ற கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கோ எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள்.

இன்று அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட பரிசுத்தம் இல்லையென்றாலும் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதும் இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஒளியின் தூதனாகிய சாத்தான், உன்னதமான விசுவாச தன்மைகளின் ஒரு பக்கத்தை மட்டும் காண்பித்து அநேக ஆத்மாக்களை ஏமாற்றுகிறான். ஆனால் அவர்களின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்படும் போது அதன் மதிப்பு என்ன? பரலோகத்தில் நுழைவதற்கு அவருடைய விசுவாசம் தகுதியற்றதாய் காணப்படுகிறது. அது சக்தியற்றதாய், உயிரற்றதாய், பயனில்லாத ஒரு காரியமாய் இருக்கிறது.

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விசுவாசமானது “தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவு” (தீத்து 1:1). இது இருதயத்தைத் தூய்மைப்படுத்தும் விசுவாசம். (அப்போஸ்தலர் 15:9), நம்மில் இருக்கும் பாவத்திற்காக துக்கப்படுகிற விசுவாசம். கேள்வி கேட்காமல் தேவனுக்கு கீழ்ப்படிவதை உண்டாக்குகிற விசுவாசம். (எபிரெயர் 11:8). எனவே, நரகத்திற்கு மட்டுமே வழிவகுக்கும் வழிகளைப் பின்பற்றிக்கொண்டே, தாங்கள் தினமும் பரலோகத்தை நெருங்குகிறோம் என்று நினைப்பவர்கள், தங்களைத்தாங்களே ஏமாற்றுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தமில்லாமல் தன்னை தேவனின் பிள்ளை என்று அறிக்கையிடுகிறவன் அவரை ஒரு பரிசுத்தமற்ற தேவனாக உலகத்தாருக்கு காட்டி அவருக்கு மிகுந்த அவமரியாதையை கொண்டு வருகிறான். இரட்சிக்கும் விசுவாசத்தின் உண்மையான தன்மை சோதனையின் மத்தியிலும் நம்மில் தெய்வ பக்தியான ஆவிக்குரிய மலர்களையும் கனிகளையும் உற்பத்தி செய்யும்போதே நிரூபிக்கப்படுகிறது.

கிறிஸ்துவில், தேவன் தனது மக்களுக்கு அவர்கள் நோக்கி முயற்சிக்க வேண்டிய நீதியின் தரத்தை வைத்துள்ளார். அதையே அவர்கள் லட்சியமாக வைத்து பின்பற்றும்படி தேவன் எதிர்பார்க்கிறார். நம்முடைய வாழ்க்கையில் முழுமையான கீழ்ப்படிதல் மூலமாக நம்மில் இயேசுகிறிஸ்துவை மகிமையாக பிரதிநிதித்துவப் படுத்தும்படியாக தேவன் எதிர்பார்க்கிறார். மகிமையான கிறிஸ்து தன்னை தாழ்த்திக் கொண்டு இந்த உலகத்தில் மனிதனாக வந்து நமக்காக தன்னை ஒப்புக்கொடுத்தார். அப்படி இருக்கும் போது நாம் கீழ்ப்படிதல் மூலமாகவும் பரிசுத்தமாக்குதல் மூலமாகவும் நாமே அவரிடம் ஒப்படைப்பது எவ்வளவு நியாயமானது.

"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;" (பிலிப்பியர் 2:5). அவர் நமக்கு முடிந்தவரை நெருக்கமாக வந்தார், எனவே நாமும் முடிந்தவரை அவரிடம் நெருக்கமாக செல்ல முயற்சிப்பது எவ்வளவு நியாயமானது!” என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்." (மத்தேயு 11:29). "கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்" (ரோமர் 15:3), நாமும் நம்மை வெறுத்து, நமது சிலுவையை ஏந்தி அவரைப் பின்பற்றுவது எவ்வளவு நியாயமானது. (மத்தேயு 16:24), ஏனெனில் அவ்வாறு செய்யாமல் நாம் அவருடைய சீஷர்களாக இருக்க முடியாது. (லூக்கா 14:27). நாம் கிறிஸ்துவுடன் மகிமையில் ஒத்திருக்க வேண்டுமென்றால், முதலில் பரிசுத்தத்தில் அவரோடு ஒத்திருக்க வேண்டியது எவ்வளவு அவசியம்! "அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்" (1 யோவான் 2:6). "கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநீதியை விட்டு விலகக்கடவன்" (2 தீமோத்தேயு 2:19) ஒன்று கிறிஸ்துவின் ஜீவனை தரித்துக்கொள்ளுங்கள் அல்லது கிறிஸ்துவின் நாமத்தை விட்டுவிடுங்கள்!