இரட்சிப்பின் வழி
படிப்புகள்: 9
Print
ஆசிரியர்: ஆர்தர் W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2:30 நிமிடங்கள்

 "இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" நான் எதிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும்? நீங்கள் எதிலிருந்து இரட்சிக்கப்பட விரும்புகிறீர்கள்? நரகத்திலிருந்தா? நரகம் ஓன்று இல்லை என்று நினைக்கிறீர்களா? ஏனெனில் அங்கு செல்வதற்கு யாரும் விரும்புவதில்லை. பரிசுத்தமான தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தலையாய பிரச்சினை என்னவென்றால் பாவம். நீங்கள் அந்த பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட விரும்புகிறீர்களா?

பாவம் என்றால் என்ன?

பாவம் என்பது தேவனுக்கு எதிராக கலகம் செய்வது. இது மனிதனின் சுயஇச்சைகளைத் திருப்திப்படுத்துவது; தேவனின் கட்டளைகளை முற்றிலும் தவிர்க்கும் செயல்; என்னுடைய நடத்தை தேவனை மகிழ்விக்கிறதா அல்லது காயப்படுத்துகிறதா என்பதை குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் அலட்சியமாக இருப்பது பாவம். தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக நம்முடைய ஒவ்வொரு செயல்பாடும் பாவம். நம்முடைய சிந்தனை தேவனுக்கு விரோதமாக இருப்பது பாவம்.

தேவன் ஒருவனை இரட்சிப்பதற்கு முன்பு, முதலில் அவனை பாவத்தினால் ஏற்படும் குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தி தான் ஒரு பாவி என்பதை உணரவைக்கிறார். இதன் அர்த்தம், "ஆம், நாமனைவரும் பாவிகள், அது  எனக்கு தெரியும்" என்று மற்றவர்களுடன் சேர்ந்து சொல்வது அல்ல. மாறாக, பரிசுத்த ஆவியானவர் மனிதனின் இருதயத்தில் குற்ற உணர்ச்சியை உண்டாக்கி, நான் வாழ்நாள் முழுவதும் தேவனுக்கு எதிராக கலகம் செய்துவிட்டேன், என் பாவங்கள் ஏராளமாகவும், மிகப் பெரியதாகவும், மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன, தேவனின் கிருபையை எட்ட முடியாத அளவுக்கு நான் எல்லை மீறிவிட்டேன் என்று பயந்து நடுங்க வைப்பது.

இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள் உங்களை பரலோகத்திற்கு முற்றிலும் தகுதியற்றவராக நினைக்கிறிர்களா? பரிசுத்த தேவனின் முன்னிலையில் நிற்பதற்கு அஞ்சுகிறீர்களா? உங்களில் எந்த நல்லதும் இல்லை, உங்கள் கணக்கில் எந்த நன்மையும் வரவு வைக்கப்படவில்லை என்று  இப்போது உங்களுக்குத் தெரிகிறதா? நீங்கள் எப்போதும் தேவன் வெறுக்கும் விஷயங்களை நேசித்து, அவர் நேசிக்கும் விஷயங்களை வெறுத்துவிட்டீர்கள் என்றும் உங்களுக்கு புரிகிறதா?

இதை உணர்ந்து, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயம் உடைந்திருக்கிறதா? கர்த்தருடைய ஓய்வு நாட்களை நீங்கள் அவமதித்ததற்காக, அவருடைய வார்த்தையை புறக்கணித்ததற்காக, உங்கள் எண்ணங்கள், ஆசைகள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் அவருக்கு உண்மையான இடம் கொடுக்காததற்காக நீங்கள் துக்கித்திருக்கிறீர்களா? இதை நீங்கள் இன்னும் தனிப்பட்ட முறையில் உணரவில்லையென்றால் , இப்போதைக்கு உங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால், தேவன் சொல்கிறார்:

"நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்" (லூக்கா 13:3).

நீங்கள் இந்த நிலையிலே மரித்தால் எப்போதும் நரகத்திலே மாண்டுபோவீர்கள்.

ஆனால், இப்போது பாவம் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவும், தேவனை மனஸ்தாபப்படுத்துவது உங்களுக்கு மிகப்பெரிய துக்கமாகவும் இருந்தால், இப்போது உங்கள் மனதின் விருப்பம் கர்த்தரை மகிழ்விக்கவும் மகிமைப்படுத்தவும் விருப்பமாய் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நம்பிக்கை உண்டு.

"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் (இயேசு கிறிஸ்து) வந்திருக்கிறார்" (லூக்கா 19:10).

நீங்கள் அவருக்கு எதிரான உங்கள் போர்க் கருவிகளை கீழே போடத் தயாராக இருந்து, அவருடைய ஆளுகையை வணங்கி, உங்களை அவருடைய கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால், அவர் உங்களை இரட்சிப்பார்.

அவருடைய இரத்தம் மிகவும் அழுக்கானவரையும் சுத்தமாக்கும். அவருடைய கிருபை பலவீனமானவரையும் தாங்கி உதவும். அவருடைய பெலன் சோதனையிலிருந்து நம்மை விடுவிக்கும்.

"இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்." (2 கொரிந்தியர் 6:2).

கிறிஸ்துவுக்கு உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். உங்கள் இருதயத்தின் சிங்காசனத்தை அவரிடம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒழுங்குமுறையை அவரிடம் ஒப்படையுங்கள். அவருடைய பரிகார பலியில் நம்பிக்கை வையுங்கள். முழு ஆத்துமாவோடு அவரை நேசியுங்கள். முழு வல்லமையோடும் அவருக்குக் கீழ்ப்படியுங்கள். அவர் உங்களை பரகலோத்திற்கு அழைத்துச் செல்வார்.

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை." (அப்போஸ்தலர் 16:31).